பெண் போலீசுடன் கள்ள காதல்... போலீஸ்காரை குத்தி கொலை செய்த சக போலீஸ்காரர் கைது!
திருவள்ளூரில் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வரும் பெண் காவலரின் வீட்டில் மற்றொரு காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூரில் பெண் காவலருடன் தகாத தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள சக போலீஸ்காரரை தட்டிக் கேட்ட மற்றொரு போலீஸ்காரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவருக்கும் மற்றொரு போலீஸான கல்யாணைக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
அதே நேரத்தில் கல்யாணைக்கு தெரியாமல் சரண்யாவுக்கு, சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவருடனும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இது தெரிய வந்தபோது அமிர்தராஜூடன் கல்யாணை மோதியுள்ளார்.

மது போதை
இதனால் அமிர்தராஜுக்கும், கல்யாணைக்கும் முன்விரோதமானது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் கல்யாணை தமது சக போலீஸ்காரர்களான சுந்தரபாண்டியன், சந்திரன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார்.

ஒரு கை பார்க்க வேண்டும்
அப்போது சரண்யா விவகாரத்தை கல்யாணை நண்பர்களிடம் விவரித்திருக்கிறார். தம்மை அமிர்தராஜ் மிரட்டியதாகவும், கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும், தற்போது சரண்யா வீட்டில் உள்ள அமிர்தராஜை ஒரு கை பார்க்க வேண்டும் என்றும் கல்யாணை தெரிவித்தாராம்.

தகராறில்...
மதுபோதையில் இருந்த 3 பேரும், சரண்யா வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்த அமிர்தராஜை வெளியே வருமாறும், தகராறில் ஈடுபட்டனர். அப்போது சுந்தரபாண்டியனுக்கும், அமிர்தராஜுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

கத்திக் குத்து
திடீரென அமிர்தராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரபாண்டியனை குத்தினார். இதில் அலறிய சுந்தரபாண்டியனின் குரலை கேட்டு மற்ற போலீஸ்காரர்கள் குவிந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரபாண்டியனை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அமிர்தராஜை திருவள்ளுர் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரண்யா யார்?
கொலைக்கு காரணமாக இருந்த சரண்யா திருமணமானவர். அவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கள்ளக்காதல் விவகாரத்தில் போலீஸ்காரர் ஒருவர் சக போலீஸ்காரரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications