ஏங்க தொகுதிக்கு வரலைன்னு கேட்டது குற்றமா.. எம்.எல்.ஏ கருணாஸ் புகாரில் ஒருவர் கைது!
தொகுதிக்கு வருவதில்லையே என கேட்டு, எம்எல்ஏ கருணாசிடம், போனில் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம்: தொகுதி பக்கம் ஏன் வருவதில்லை என எம்எல்ஏவும், நடிகருமான கருணாசிடம் கேட்டு தொலைபேசியில் தகராறு செய்த நபர் இப்போது போலீசில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளாராம்.
நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு சமீபத்தில்தான், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை தொடங்கினார், நடிகர் கருணாஸ். அதிருஷ்டவசமாக அதிமுக கூட்டணிக்கு அழைக்க, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் அக்கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாஸ்.

எம்எல்ஏவான பிறகும், சென்னையிலேயே தங்கிவிடுகிறார் கருணாஸ். தொகுதி பக்கம் அடிக்கடி செல்வதில்லை என தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், கருணாஸ் 2 நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது, அவருடைய செல்போனுக்கு அழைத்த ஒரு நபர், தன்னை தொகுதிவாசி என கூறி அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துள்ளார்.
"தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், நீங்கள் தொகுதிக்கு வருவதே கிடையாது" என அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அந்த நபர் கருணாசுக்கு மிரட்டல்விடுத்ததாக கூறப்படுகிரது. இதுகுறித்து கேணிக்கரை போலீசில் கருணாஸ் அளித்த புகாரின்பேரில், செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் (39) என்பவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications