1 லட்சம் மரக்கன்றுகளுடன் பசுமை நகரமாக மாறுகிறது மானாமதுரை.. பிற நகரங்களுக்கு முன்னுதாரணம்
மதுரை: மானாமதுரை தாலுகாவை பசுமை நகராக மாற்ற ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கி நடந்து வருகிறது.
மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலை பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதோடு, வைகை ஆற்றங்கரையோரம் அரசு புறம்போக்கு நிலம் ஏராளமாக இருப்பதால் பொதுமக்கள் உதவியுடன் மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, மானாமதுரை தொகுதி எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி (அதிமுக) ஆலோசனையின் பேரில், தாசில்தார் சிவகுமாரி தலைமையில் வர்த்தகர் சங்கம், தன்னார்வலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. அரவிந்தன், மானாமதுரை தாலுகா அலுவலக வாசலில் முதல் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார்.
மானாமதுரை தாலுகா அலுவலக வாசலில் இருந்து தேவர் சிலை வரை மரக்கன்றுகள் நடப்படுகிறது. சுத்தமான காற்றை உருவாக்கவும், வெப்பத்தை குறைக்கவும் மரம் நடுதல் உதவும். இதனால் மானாமதுரை பசுமை நகரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.