ஓஎன்ஜிசியை எதிர்த்து.. மன்னார்குடி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டம்
ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார்குடி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் 11 நாட்களாக கதிராமங்கலம் கிராமத்தில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து மன்னார்குடி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கிறது ஓஎன்ஜிசி. அங்கு விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால், கிராமத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் 9 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் 11 நாட்களாக முழுகடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மன்னார்குடியில் உள்ள கல்லூரி மாணவர்கள் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதிராமங்கலத்தில் கைதான 10 பேரை விடுவிக்க வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதே போன்று இன்று தஞ்சை வணிகர்கள் கடைகளை மூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தஞ்சையை சுற்றியுள்ள திருவிடைமருதூர், ஆடுதுறை, பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications