மின்மயானத்தில் தனது உடலை எரியூட்ட விரும்பாத மனோரமா!
சென்னை: தனது மறைவுக்குப் பின்னர் உடலை சாதாரண முறையிலேயே எரியூட்ட வேண்டும் என்றும் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டாம் என்றும் நடிகை மனோரமா முன்பே சொல்லியிருந்த காரணத்தால்தான் அவரது உடலை மின் மயானத்தில் எரியூட்டவில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மயிலாப்பூர் இடுகாட்டில் எரியூட்டலுக்கான ஏற்பாடுகளை நேரில் நின்று கவனித்தார் சரத்குமார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஆச்சி மனோரமா தனது மறைவுக்கு முன்பாகவே தான் இறந்தால், மின்சார மயானத்தில் தகனம் செய்ய வேண்டாம். வழக்கமான முறையில் எரியூட்ட வேண்டும். சாஸ்திரம், சம்பிரதாயம், சாங்கியப்படியே அது நடைபெற வேண்டும் என்று தெரிவித்திருந்ததாக அவரது பேரன் ராஜராஜன் தெரிவித்தார்.
இதனால்தான் அவரது இறுதிச் சடங்கை மின்மயானம் அல்லாமல் இங்குள்ள மயானத்தில் நடத்த முடிவெடுத்தோம். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து கொடுத்துள்ளது. மேயருடனும் இதுதொடர்பாக பேசினோம்.
ஆச்சி மனோரமாவின் நினைவுகளைப் போற்றும் வகையில் மணிமண்டபம் உள்ளிட்டவை நிச்சயம் அமைக்கப்படும். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் அறிவிப்பார். அவரது விருப்பத்திற்கேற்ப செயல்பட நடிகர் சங்கமும் தயாராக இருக்கிறது என்று கூறினார் சரத்குமார்.