ஏடிஎம்ல கார்டு போட்டா வெறும் காகிதம்தான் வருது... தவிக்கும் மக்கள்
ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து பணம் எடுக்கப் போனால் பணம் தீர்ந்து விட்டதாக வெறும் காகிதம் மட்டுமே வருகிறது என்று பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை : இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் ஏடிஎம்கள் இன்று திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இருந்தும் 250 ஏடிஎம்கள் கூட ஒழுங்காக செயல்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
சென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏடிஎம்கள் திறந்து உள்ளன. அதிலும் பல ஏடிஎம்களில் பணம் இல்லாமல் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தவித்துப் போன சென்னைவாசிகள் இன்றும் ரிசர்வ் வங்கியை நோக்கி படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மோடி அறிவிப்பு
நவம்பர் 8ம் தேதியன்று இரவு சம்பளத்தை பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்து வந்து எண்ணிக்கொண்டிருந்த நடுத்தர மக்கள் பலருக்கும் இடியாக இறங்கியது மோடியின் அறிவிப்பு. 1000, 500 ரூபாய் இன்று இரவு முதல் செல்லாது. நாளை வங்கி விடுமுறை. நவம்பர் 10ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை வங்கிகளில் இந்த பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார் மோடி.

மக்கள் தவிப்பு
ஏடிஎம்கள் இரண்டு நாட்கள் விடுமுறை என்றும் மக்கள் அனைவரும் நவம்பர் 11ம் தேதிவரை ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறவே, அடுத்த நிமிடமே பலரும் ஏடிஎம்க்கு படையெடுத்தனர். செவ்வாய்கிழமை இரவு பலருக்கும் தூக்கம் போனது. கையில் இருக்கும் பணத்தை என்ன செய்வது எப்படி மாற்றுவது என்ற யோசனையோடு தூங்கிப் போனார்கள்.

நீண்ட வரிசை
நவம்பர் 10ம் தேதி வங்கி திறந்த உடன் நீண்ட வரிசையில் நின்றும் பலருக்கும் பணம் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று ஏடிஎம்கள் திறக்கப்பட்டன. ஏடிஎம்கள் சில இடங்களில் மட்டுமே செயல்பட்டன. எல்லா இடத்திலும் நீண்ட வரிசையே காணப்பட்டது. வெளியில் என்னதான் நடக்கிறது. பணத்தை சம்பாதிக்க இரவு பகல் பாராமல் உழைத்த மக்களுக்கு அந்த பணத்தை செலவு செய்ய முடியாமல் செல்லாக்காசகி போனதே என்ற கவலையில் ஒவ்வொரு ஏடிஎம் ஆக ஓடினர்.

ஏடிஎம் வாசலில் கியூ
மயிலாப்பூர்பஜார் சாலையில் நின்றிருந்தது ஒரு கியூ. சார் இங்க பணம் வரலையே, கச்சேரி ரோடுல வருதாம் என்று ஒருவர் கூறவே, அங்கே ஓடினர் அனைவரும். அங்கே ஏற்கனவே ஒரு கியூ நின்று கொண்டிருந்தது. கடும் வெயில் வேறு வழியின்றி பணம் எடுக்க வேண்டுமே வேறு வழியில்லையே என்று காத்திருந்தனர் மக்கள்.

பணம் வரலையே?
அங்கேயும் அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு சிலருக்கு பணம் கிடைத்த நிலையில் ஒரு பெண் ஏடிஎம் கார்டை செலுத்தி பின் நம்பரை போட வெறும் காகிதம் மட்டுமே வந்தது. அதை படித்து அந்த பெண் துடித்து போனார். அதே நேரத்தில் சிலர் ஏடிஎம் கார்டை செலுத்தை அவர்களுக்கு 100 ரூபாய் நோட்டுக்களாக 2000 ரூபாய் வந்தது. பணம் கிடைக்காத பலரும் கையில் இருந்த பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கியை நோக்கி ஓடினர்.

தபால் நிலையங்களில் கூட்டம்
வங்கி வாசலில் மணிக்கணக்காக காத்திருந்து இன்றும் பலர் பணத்தைப் பெற்றனர். 2 மணிவரை வங்கிகளில் பணம் வழங்கப்பட்டது. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தபால் நிலையங்களில் பணம் காலை 8 மணியில் இருந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு 1 மணிவரை பணம் மாற்றித் தரப்பட்டது. பணம் முடிந்து விட்டது. 20 லட்சம் ரூபாய் மட்டுமே வந்தது என்றும் அதை மாற்றிக்கொடுத்து விட்டதாகவும் தபால் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

இன்னும் எத்தனை நாள்?
கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள் இந்த ஆண்டு கையில் இருந்த பணத்தை மாற்றவும், ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்கவும் கூட்டம் கூட்டதாக காத்திருப்பதை காணமுடிகிறது என்பதே வேதனை. நாடுமுழுவதும் கடந்த 3 நாட்களாக பணத்திற்காக மக்கள் அலைந்து வருகின்றனர். இந்த நிலை எத்தனை நாள் நீடிக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வியாகும்.












Click it and Unblock the Notifications