நீட்.. நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்களே.. மத்திய, மாநில அரசுகள் மீது பெற்றோர் ஆத்திரம்!
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று கூறி கிராமப்புற மாணவர்களின் கனவை தகர்த்தெறிந்த மத்திய, மாநில அரசுகள் மீது பெற்றோர் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.
சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்று மாநில அரசும், ஓராண்டுக்கு வேண்டுமென்றால் தருகிறோம் என்று மத்திய அரசும் மாறி மாறி நம்ப வைத்து தற்போது மாணவர்களின் கனவை நனவாக விடாமல் தடுத்து விட்டதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய அரசு இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது. இந்த தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தது. எனினும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு புதிய சட்ட வரைவை இயற்றினால், அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதை நம்பி சட்ட முன் வடிவை தமிழக அரசு இயற்றி மத்திய அரசிடம் ஒப்படைத்து. அதேசமயம் தமிழக அரசின் சட்ட வரைவை எதிர்த்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
உச்சநீதிமன்றம் அதிரடி
அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
தரவரிசை பட்டியல் வெளியீடு
நீட் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 31,692 பேர் கொண்ட தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் 20 இடங்களில் 5 இடங்களை மாநில பாடபிரிவு மாணவர்களும், 13 இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களும், சர்வதேச பாடபிரிவில் 2 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
மாநில பாடப்பிரிவு மாணவர்கள்
மத்திய, மாநில அரசின் இந்த குழப்ப நிலையால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் கனவுகள் கானல் நீராகி விட்டன. எதற்காக இந்த குழப்பம். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று கூறியிருந்தால் இந்த நிலை நீடித்திருக்காதே. பெற்றோரும் அவதி அடைந்திருக்க மாட்டார்கள்.
பல்டி அடித்த மத்திய அரசு
உச்ச நீதிமன்றத்தில் நீட் மாணவர்கள் வழக்கு தொடுக்கும் வரை தமிழக அரசுக்கு சாதகமாக இருந்த மத்திய அரசு திடீர் பல்டியாக உச்சநீதிமன்றத்தில் மாற்றி பேசியது. இதனால் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
விரும்பாத படிப்பு
விரும்பிய மருத்துவ இடங்கள் கிடைக்காததால் துளிக் கூட விருப்பம் இல்லாத பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் சேரும் நிலை உள்ளது. இல்லாவிடில் இந்த ஓராண்டை வீணடித்து விட்டு நீட் தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டு அடுத்த ஆண்டு எழுத நினைக்கும் நிலைக்கும் மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டும் அதேதான்
ஏனெனில் நீட் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் முகேஷ் கடந்த 2015-இல் பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவம் பயில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அதற்குள் 2016-இல் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து அவர் பொறியியல் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஓராண்டாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் மாநில பாடப்பிரிவில் ரேங்க் பெற்ற சில மாணவர்களும் கடந்த ஓராண்டாக முயற்சித்துதான் வெற்றி பெற்றுள்ளனர்.
கல்வி தரம்
நீட் தேர்வை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடாதது ஏன் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் என்றும் இதுவரை மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யாமல் அவசர அவசரமாக கலந்தாய்வை நடத்த துடிப்பது ஏன் என்று ஆயிரக்கணக்கான கேள்விகளுடன் பெற்றோர் நியாயத்தை தேடி அலைகின்றனர். தமிழகத்தின் கல்வி தரம் உயர்த்தப்படாதவரை நீட் தேர்வு என்பது மாநில அளவில் படித்த மாணவர்களுக்கு சாபமாகவும், சிபிஎஸ்இ படித்த மாணவர்களுக்கு வரமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.