போலீஸுக்கு போட்டுக் கொடுத்த உளவாளி "மதுரை பாண்டி"... பெண் மாவோயிஸ்டுகள் திடுக் தகவல்
கரூர்: கரூரில் சிக்கிய மாவோயிஸ்டுகள் தங்களை காட்டிக் கொடுத்தது மதுரை பாண்டி என்ற உளவாளிதான் என்றும் கருங்காலியே உளவு வேலையை நிறுத்திடு என்றும் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களோடு மக்களாக இருந்த மாவோயிஸ்டுகளை அடுத்தடுத்து காட்டிக் கொடுத்த மதுரை பாண்டி மாஜி மாவோயிஸ்டாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வனப்பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு ஆயுதபயிற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை கியூபிரிவு போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாவோயிஸ்ட் சிவா என்கிற பார்த்திபன் சுட்டு கொலை செய்யப்பட்டார். 29 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
சில மாவோயிஸ்ட்கள் தப்பியோடி விட்டனர். அவர்களை கைது செய்ய கியூ பிரிவு போலீ சார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதில் சென்னை அம்பத்தூரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த விவேக் சிக்கினார். இந்த நிலையில் கரூரில் சந்திரா மற்றும் கலா என்ற பெண் மாவோயிஸ்டுகள் போலீசார் பிடிபட்டனர்.

சென்னையில் கைது
மேலும் சென்னை புறநகர் பகுதியான மணிமங்கலத்தில் தங்கியிருந்து கல்குவாரியில் வேலை செய்து வந்த ரீட்டா ஜாய்ஸ்மேரியும் பிடிபட்டார். ஊத்தங்கரை ஊத்தங்கரையில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ரீட்டாமேரியும் அவரது கணவர் கண்ணனும் தொடர்புடையவர்கள்.

8 மாவோயிஸ்டுகள் எங்கே?
அத்துடன் மேலும் 8 மாவோயிஸ்டுகள் சேலம், தர்மபுரி மாவட்டத்தில் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர். சேலத்தில் மணிவாசகம், பழனிவேல், கார்த்திக் ஆகிய 3 மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி பொம்மிடி பூபாலன், ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை பகத்சிங் ஆகிய 2 மாவோயிஸ்ட்களை ஒகேனக்கல், பூதிப்பட்டி, அஞ்செட்டி, பெருங்காடு, நாயக்கன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கியூ பிரிவு போலீசாரும், நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசாரும் தனித்தனியே தேடுகின்றனர். பூபாலன், பகத்சிங் தேடப்படும் மாவோயிஸ்ட்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய புகைப்படத்தை வீடு வீடாக சென்று காண்பித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோர்ட்டில் ஆஜர்
இதனிடையே கரூரில் சிக்கிய பெண் மாவோயிஸ்டுகள் கலா, சந்திரா இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கியூ பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கரூர் ஜே.எம். 1-வது நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்காக 2 பெண் மாவோயிஸ்டுகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

'கருங்காலி பாண்டி'
இந்த விசாரணையின் முடிவில் கலா, சந்திரா 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதித்து மாஜிஸ்திரேட் மோகனவள்ளி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்துக்கு வெளியே வந்த போது, எங்களை உளவுபார்த்த மதுரை பாண்டியே! உளவு வேலையை நிறுத்திடு! மிதித்திடுவோம் மிதித்திடுவோம் கருங்காலி பாண்டியை மிதித்திடுவோம்!! என எச்சரிக்கை விடுத்து உரக்க முழக்கமிட்டனர். இதனால் மதுரை பாண்டி என்பவர் உதவியுடன்தான் மாவோயிஸ்டுகள் சிக்கி வருவது தெரியவந்துள்ளது.

மாஜி மாவோயிஸ்ட்?
பெண்மாவோயிஸ்டுகள் சொல்லுகிற மதுரை பாண்டி, மாஜி மாவோயிஸ்டாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அவரையே தங்களது உளவு வேலைக்கு கியூ பிரிவு போலீசார் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications