ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை: ஹைகோர்ட்டில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் முறையீடு
ஆர்.கே.நகரில் நீக்கப்படாத 5117 போலி வாக்காளர்களை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நாடியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் 5,117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் இன்று முறையீடு செய்துள்ளார். இதையே மனுவாக தாக்கல் செய்ய மருதுகணேஷூக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து 45,000 போலி வாக்காளர்களை நீக்கிவிட்டதாக தேர்தல் ஆணையமும் உயர்நீதிமன்றத்தில் கூறியது. ஆனால் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில், ஆர்.கே.நகரில் இன்னமும் 5,117 வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என மருதுகணேஷ் முறையிட்டார்.
இதை ஒரு மனுவாகத் தாக்கல் செய்ய மருதுகணேஷூக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் அறிவுறுத்தியது. இம்மனுவை வேறு ஒரு பெஞ்ச் நாளை விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.