தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும்..சென்னை மெரினா போராட்ட குழு அறிவிப்பு
ஜல்லிக்கட்டு தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
சென்னை: ஜல்லிகட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டகுழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அவர்களின் பிரதிநிதிகள் 10 பேரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் போராட்டக்குழுவின் பிரதிநிதிகளுடன் சுமார் அரைமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஜல்லிக்கட்டை நடத்திய ஆக வேண்டும். காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பீட்டா அமைப்பை குறைந்தபட்சம் தமிழகத்தில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதல்வர் ஆதரவு தர வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளோம். அமைச்சர்கள் முதல்வரிடம் பேசினார்கள். முதல்வர் இன்று முழு அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதன்பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மெரினாவில் கூடியிருந்தவர்களிடம் இதனை தெரிவித்தனர். முதல்வரின் அறிக்கைக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் மெரினாவில் போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications