அரசியல் கட்சிகள் பாணியில் 'அம்மா' கூட்டத்துக்கு அமோகமாக ஆட்சேர்ப்பு.. பரபர திண்டுக்கல்
அரசியல் கட்சிகள் பாணியில் மாதா அமிர்தானந்தமாயி திண்டுக்கல் கூட்டத்துக்கு ஆட்கள் திரட்டப்படுவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
திண்டுக்கல்: மாதா அமிர்தானந்தமாயி திண்டுக்கல் கூட்டத்துக்கு ஊர் ஊராக சென்று ஆட்களை திரட்டுவதை பார்த்து அரசியல் கட்சிகளே ஆச்சரியப்பட்டு போய் நிற்கின்றன.
திண்டுக்கல்லுக்கு மாதா அமிர்தானந்தமாயி இன்று வருகை தருகிறார். திண்டுக்கல் அங்குவிலாஸ் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகளை அனுப்பி ஆட்களைத் திரட்டி வரும் பணியில் அமிர்தானந்தமாயி சீடர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு கிராமத்துக்கு 2 பேருந்துகள் என அனுப்பி வைத்து காலை முதலே ஆட்களை திரட்டும் பணியில் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
பேருந்து வசதி மட்டுமின்றி இரவு சாப்பாடும் போடுகிறோம் வாருங்கள் என கூவி கூவி அழைக்கின்றனர். பாஜக ஆதரவாளர்களே அமிர்தானந்தமாயி கூட்டத்துக்கான ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் பணம், சாப்பாடு கொடுத்து கூட்டங்களுக்கு ஆட்சேர்க்கின்றனர். இந்த அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் அமிர்தானந்தமாயி கோஷ்டியினர் பேருந்துகளை அனுப்பி சாப்பாடு போடுவதாக கூறி ஆட்சேர்த்து வருவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.