சசிகலாவை நிராகரியுங்கள்... ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது - மதுசூதனன்
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்துள்ளார். சசிகலவை நிராகரியுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று ஓ.பன்னீர் செல்வதிற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் சசிகலாவை நிராகரியுங்கள் என்று கோரிக்கை வைத்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறினார்.
ஒ.பன்னீர் செல்வத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்றுவதை சசிக்க முடியாத நிர்வாகிகள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணிதிரண்டுள்ளனர். சசிகலாவுக்கு எதிரான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தாம் அதிமுக பொருளாளர் என்பதால் கட்சி வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன் சசிகலா இடைக்கால பொதுச்செயலர் என்பதால் பொதுச்செயலர் பதவியும் காலியாகவே இருக்கிறது எனவும் பகிரங்கமாக அறிவித்தார். இதனால் சசிகலாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவரான மதுசூதனன் திடீரென சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வருகை தந்து தமது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், கயவர்களிடம் கட்சி சிக்கிக்கொண்டுள்ளது என்றார். அதை சகிக்க முடியாமல்தான் ஓ.பன்னீர் செல்வத்திடம் சரணடைந்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தொண்டர்களும், மக்களும் சசிகலாவை நிராகரிக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் கூறினார். அதிமுகவிற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மிகப்பெரிய மக்கள் புரட்சி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். மதுசூதனனை வரவேற்ற நத்தம் விஸ்வநாதன், பிஎச் பாண்டியன் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து பேசினர்.












Click it and Unblock the Notifications