அமித் ஷா வீட்டில் துணை ராணுவ துணையோடு ரெய்டு நடத்த வேண்டும்.. 'மே 17 இயக்கம்' ஆக்ரோஷம்
அமித் ஷா எனும் பாஜகவின் தேசிய கட்சி தலைவர் செய்திருக்கும் 500 கோடி ரூபாய் கருப்புப் பணம் குறித்து ‘துணை ராணுவத்தோடு’ ரெய்டு நடத்துவார்களா? என 'மே 17 இயக்கம்' தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நடத்தப்பட்டதை போல பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்த வேண்டும் என்று 'மே 17 இயக்கம்' தெரிவித்துள்ளது.
'மே-17 இயக்கம்' வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, நிர்வாக இயக்குனராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கோ- கூட்டுறவு வங்கியில் நவம்பர் 8-12ம் தேதிகளுக்குள் ரூ.500 கோடி பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு கூட்டுறவு வங்கியில் வெறும் மூன்று நாட்களுக்குள் இவ்வளவு அதிகமாக பணம் செலுத்தப்பட்டதும், மாற்றப்பட்டதும் எப்படி? கூட்டுறவு வங்கிகள் பழைய பணத்தை மாற்றுவதற்கு தடைவிதித்திருக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளில் பழைய பணம் மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, கேரளா, வங்காளம் போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு கடன் தர விடாமல் கூட்டுறவு வங்கிகளை முடக்கிய பாஜக- மோடி அரசு, தனது குஜராத் மாநிலத்தில் மட்டும் திறந்து விட்டிருக்கிறது. குஜராத்தில் 18 கூட்டுறவு வங்கியில் 17 வங்கிகள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. இதுமட்டுமல்லாமல் குஜராத் அமைச்சர் சங்கர்பாய் சவுத்ரி தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் 200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி தடைவிதித்திருந்த நிலையில் இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?, ரிசர்வ் வங்கியின் தலைவரும் குஜராத்தை சேர்ந்தவர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஆக, இந்த பண முடக்கம் என்பது பாஜகவினர் மட்டும் தங்களது கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் யுக்தி என்பதைத் தவிர்த்து வேறில்லை.
குஜராத் பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ யதின் ஓஜா, அகமதாபாத் கூட்டுரவு வங்கியில் பணம் செலுத்த நின்றிருந்த பாஜகவின் கும்பல்களைப் பற்றிய வீடியோ தன்னிடம் இருப்பதாக பகிரங்கமாக மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு, 56 இன்ச் மோடி இதுவரை பதிலளிக்கவில்லை.
அமித் ஷா எனும் பாஜகவின் தேசிய கட்சி தலைவர் செய்திருக்கும் இந்த 500 கோடி ரூபாய் கருப்புப் பணம் குறித்து 'துணை ராணுவத்தோடு' ரெய்டு நடத்துவார்களா? அல்லது 'இந்த நேர்மை, யோக்கியம், ஊழல் ஒழிப்பு' நாடகங்கள் எல்லாம் தமிழகம் போன்ற பகுதிகளுக்கு மட்டுமா?
சென்ற டிசம்பர் 19ம் தேதி திங்கள் கிழமை, இவ்வங்கியின் அகமதாபாத் ஆஷ்ரம் சாலையில் இருக்கும் தலைமை கிளையில் அமலாக்கத் துறையினரால் 7 மணி நேரம் நடத்தபப்ட்ட ரெய்டு இதுவரை ஊடகங்களால் பகிரங்கப்படுத்தபப்ட வில்லை. தமிழகத்தில் நடந்த செய்தி மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாஜகவை அம்பலப்படுத்துவதற்குரிய ஆதாரங்களை நவம்பர் 8 முதல் மே17 இயக்கம் வெளியிட்டு வருகிறது.
இவ்வாறு மே-17 இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications