144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் காவிரி புஷ்கரம் திருவிழா...12 நாள் நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா?
மயிலாடுதுறை : 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காவிரி புஷ்பர விழாவின் நிகழ்ச்சி நிரல் குறித்து விழாக் குழு அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா, புஷ்கரம் திருவிழா ஆகும். இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

அதன்படி, துலா ராசிக்குரிய காவிரி நதியில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை புஷ்கரம் விழா நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா மகா புஷ்கரம் விழாவாக கருதப்படும். அவ்வகையிலும், காவிரியில் வரும் 12ஆம் தேதி தொடங்கும் விழா, மகா புஷ்கரம் விழாவாக கொண்டாடப்படுகிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரிக்கரையில் இந்த மகா புஷ்கர விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் காஞ்சி காமகோடி பீடம் சார்பில் விழாக் குழு அமைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நீர் திறக்க கோரிக்கை
தொடர்ந்து 12 நாட்களுக்கு பக்தர்கள் நீராடும் வகையில் காவிரியில் தண்ணீர் வழங்க வேண்டும். செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் பூம்புகார் வரை தண்ணீர் சென்றடையும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து போதுமான அளவு தண்ணீரை முன்னதாகவே திறப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விழாக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
காவேரியில் நீராடும் புண்ணியம்
கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இந்த விழாவிற்கான 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாக விழாக்குழு கூறியுள்ளது. இந்நிலையில், விழா நடைபெறும் 12 நாள்களில் நடைபெற உள்ள சிறப்பு கலைநிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சி விவரம்
தினமும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சிகளின் விவரங்கள்:
செப்-12: காஞ்சி சங்கராச்சாரியர்கள் பங்கேற்கும் விருது வழங்கும் விழா. இதைத் தொடர்ந்து டாக்டர்.கணேஷின் பக்திப்பாடல்கள்.
செப்-13: திருவானைக்காவல் ஓதுவார் சிவசம்பவாரின் தேவார இன்னிசை, மணிக்கண்டனின் சொற்பொழிவு.
செப்-14: காஞ்சி ஜெயேந்திர சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி, மும்பை கல்யாண சுந்தரம் வழங்கும் "சரணம் தேவி காவிரி" பரதநாட்டிய நிகழ்ச்சி.
செப்-15: பாம்பே பெண்கள் குழுவினரின் "சவுந்தர்ய லஹரி பாராயணம்" , அனந்தராமன் குழுவினரின் பக்திப்பாடல்கள்.
செப்-16: கோயில் பூசாரிகளின் ஊர்வலம், காமேஷ் வயலின், உமையாள்புரம் மாலி மிருதங்கத்துடன் சூர்யபிரகாஷின் வாய்ப்பாட்டு, கலாமித்ரா ராம்ஜியின் ஸ்ரீமகா பெரியவா நாடகம்.
செப்-17: மடிப்பாக்கம் மாலினி, பாலாஜி குழுவினரின் பரதநாட்டியம், கடலூர் கோபி பாகவதரின் "பாகவத லீலைகள்" பஜனை.
செப்-18: சோ.சோ.மீ.சுந்தரத்தின் "கடவுளை காட்டும் காவிரி" சொற்பொழிவு, வீரமணி ராஜூவின் பக்தி இன்னிசை.
செப்-19: திருக்குறள் ஒப்பித்தல், கோவை ஜெயராம பாகவதரின் பஜனை.
செப்-20: லஷ்மி பிரியா நடன குழுவினரின் "பாவங்கள் போக்கும் காவிரி" நடன நிகழ்ச்சி, கடையநல்லூர் ராஜகோபால் பாகவதரின் பஜனை.
செப்-21: ஜெயலட்சுமி சேகரின் வீணை இசை, திருச்சி கல்யாண ராமனின் "கங்கையிற் புனிதமான காவிரி" சொற்பொழிவு.
செப்-22: காரைக்குடி பைரவ குருக்களின் தேவார இன்னிசை, டாக்டர் ஹுசைனின் "காவிரியும் கடவுளும்" சொற்பொழிவு.
செப்-23: பால நந்தகுமாரின் லயஷேத்திரா நடனம், ஹரிஹரன்- களக்காடு பாலாஜி குழுவினரின் பக்தி இன்னிசை.
செப்-24: காவிரி ஆரத்தி நிகழ்ச்சி, "நடந்தாய் வாழி காவிரி" கவியரங்கம்.
பன்னிரண்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பிரபலங்களும் பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு இவ்விழா 2161-ம் ஆண்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications