இளைஞர்களை கொன்ற சாராய வியாபாரிகள்..மலைத்துப் போனதே மயிலாடுதுறை! சாராயம் காரணம் இல்லை..போலீஸ் மறுப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சாராய விற்பனை குறித்து புகார் அளித்ததால் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. முன் விரோதம் காரணமாகவே கொலை நடந்துள்ளதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்க துரை ஆகிய மூன்று பேரும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அளவில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே நீதிமன்ற ஜாமீன் கிடைத்ததை அடுத்து வெளியே வந்த ராஜ்குமார் மீண்டும் சாராய விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது ராஜ்குமார் உள்ளிட்ட சிலர் அந்த சிறுவனை தாக்கி உள்ளனர். இந்த நிலையில் ஏன் சிறுவனை தாக்கினீர்கள் என சக்தி, ஹரிஷ் ஆகியோர் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஊர் பொதுமக்கள் சமாதானம் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் ஹரீஷ், சக்தி ஆகிய இளைஞர்களின் வீட்டுக்குச் சென்று வீட்டை சூறையாடியதோடு அவர்களை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளைஞர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஹரிஷ், சக்தி ஆகியோரை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தர் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறையில் இருவரும் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு காரணம் சாராய விற்பனை அல்ல என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு தான் கொலை சம்பவத்திற்கு காரணம் எனவும், தினேஷ் மூவேந்தர் ஆகியோர் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவ தினத்தன்று மூவேந்தன் உள்ளிட்டோர் தினேஷிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். அதனை தடுக்க வந்த ஹரிஷ் சக்தி ஆகியோர் மூவேந்தன் உள்ளிட்டோரால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
இறந்து போன ஹரிஷ், சக்தி ஆகியோருக்கும் மூவேந்தன் உள்ளிட்டோருக்கும் எந்த விதமான முன் விரோதமும் இல்லை. தினேஷ் மீது நடந்த தாக்குதலை தடுக்க முயன்ற போதுதான் இருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொலை தொடர்பாக தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் சம்பவம் நடந்ததாக கூறுவது தவறு என விளக்கம் அளித்துள்ளது. மேலும், கொலை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications