மழை கொட்டியும் மயிலாடுதுறையில் ஸ்டாலின் அசரலயே.. கொடி கம்பம் ஏற்றி "சம்பவம்"! இன்றும் நலத்திட்ட உதவி
மயிலாடுதுறை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை நேற்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மயிலாடுதுறையில் 2வது நாளாக களப்பணியை மேற்கொள்ள உள்ளார்.. மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்று முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மயிலாடுதுறைக்கு வந்திருக்கிறார்..

நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்துவிட்டு, கொள்ளிடம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை மாவட்டம் வந்த முதல்வர், கொள்ளிடம் புறவழிச் சாலையில் சோதியக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்து வைத்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இரும்பு கொடி கம்பி
60 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது, கொடிக்கம்பத்தில் பொருத்தப்பட்ட தானியங்கி மோட்டார் திடீரென இயங்காமல் போயிற்று.. எனினும், அங்கிருந்த திமுக தொண்டர்கள் இரும்பு கொடி கம்பியை வெறும் கையால் உணர்ச்சிபொங்க இழுத்து ஏற்றி வைத்தனர்.
பிறகு சீர்காழி வழியாக திருவெண்காடு சென்று அங்குள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்தார். பிறகு அங்கிருந்து மயிலாடுதுறை வரும் வழியில் செம்பதனிருப்பு பகுதியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.
கொட்டும் மழையிலும்
பிறகு மயிலாடுதுறையில் பூம்புகார் சாலையில் இருந்து பட்டமங்கல தெரு, கச்சேரி சாலை வழியாக நகர திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்கள் தந்த கோரிக்கை மனுக்களையும் பெற்று கொண்டார்.. நகரின் மையப் பகுதியான மணிகுண்டு அருகில் முதல்வர் ரோடு ஷோவின் ஈடுபட்டபோது சிறிது நேரத்தில் லேசாக மழை பெய்ய தொடங்கிவிட்டது.
ஆனாலும், குடை பிடித்தவாறு தனது நடை பயணத்தை தொடர்ந்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி கொண்டே, தன்னுடைய ரோடு ஷோவை தொடர்ந்தார். சின்னக்கடை தெரு கிளைசிறை சாலை அருகே வந்த போது மழை நின்றுவிட்டது என்றாலும், கொட்டும் மழையிலும் முதல்வர் ரோடு ஷோவை தொடர்ந்து திமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
இரண்டாவது நாள் களப்பணி
பிறகு திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தையும், கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார். மேற்கண்ட நிகழ்வுகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவ.வீ.மெய்யநாதன், எம்.பி. ஆர்.சுதா, எம்எல்ஏக்கள் நிவேதாஎம்.முருகன், எம்.பன்னீர்செல்வம், எஸ்.ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக, அதாவது ஜூலை 16 காலையில், மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்று முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications