மாநகராட்சி மேயர் சீட் யாருக்கு?: மல்லுக்கட்டும் பிரபலங்கள்
நெல்லை : நெல்லையில் மேயர் பதவி காலியாக இருப்பதால் அதற்கு தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனை கைப்பற்ற பலர் முட்டி மோதி வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து இரண்டு மாநகராட்சிகளுக்கும் முதல்வர் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்துள்ளார்.
தேர்தல் தேதி இன்னும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படலாம் என பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் மேயர் வேட்பாளர் யார் என விவாதம் தொடங்கி விட்டது. அதிமுகவில் சீட் வாங்கி விட வேண்டும் என இப்போதே பலர் காய் நகர்த்த தொடங்கி விட்டனர்.
நெல்லையை பொறுத்துவரை மாநில மகளிர் அணி துணை செயலாளர் புவனேஸ்வரி, மகளிர் கோர்ட் அரசு வக்கீல் மேகலா கென்னடி, முன்னாள் மாவட்ட செயலாளர் மகள் பியூலா, முன்னாள் மேயர் உறவினர் வெண்ணிலா, உள்பட பலர் அலையாய் அலைந்து வருகின்றனர்.
இவர்களில் பியூலா சத்தியநேசி, நாககுமரி ஆகியோரை முதலில் முதல்வர் அழைத்து நேர்காணல் நடத்தினார். கட்சியில் சேர்ந்த விபரங்கள் குறித்து முதல்வர் விசாரித்தார். இதற்கு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறியதாகவும், இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எப்படியாவது சீட் பெற வேண்டும் என்பதற்காக ஒருவர் காலை இன்னெருவர் வாரும் நிகழ்வும் நடந்து வருகிறது. தனக்கு வேண்டாத குறிப்பிட்ட நபர்களுக்கு சீட் கிடைக்க கூடாது என்பதற்காக கட்சிக்கு எதிரான அவர்களுடைய பின்னனி குறித்து பல பகீர் புகார்களை தலைமைக்கு அனுப்ப தொடங்கியுள்ளனர்.
மேயர் சீட் கேட்கும் ஒருவரின் கணவர் திமுகவுடன் போட்டோவில் இருப்பது போன்ற படங்கள் தலைமைக்கு பறந்துள்ளதால் பலர் பீதியாகியுள்ளனர். இந்நிலையில் முன்னாள் மேயர் ஒருவர் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கிடைத்து விட்டது என்று வார்டு வார்டாக வலம் வருவது வேறு சூட்டை கிளப்பியுள்ளது.
இதனால் வேட்பாளர் யார் என பலரும் பட்டிமன்றம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனால் நெல்லை மேயர் தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே பரபரப்பு தொடங்கி விட்டது.