கருணாநிதியை சந்திக்க கடும் எதிர்ப்பு.. கார் மீது தாக்குதல்.. வாசலிலேயே திரும்பி சென்ற வைகோ !
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்த வைகோவுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரது கார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோவிற்கு திமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு செருப்பை காட்டி அநாகரீகமாக நடந்து கொண்டனர். தமிழக அரசில் வராலாற்றில் இதுபோன்ற அநாகரிகமான சம்பவம் நடந்தது இல்லை என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீண்ட காலத்திற்கு பிறகு கருணாநிதியை சந்தித்தார். காவேரி மருத்துவமனைக்கு நேற்று வந்த அவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பலகட்டங்களில் கருணாநிதியை சந்திப்பதை தவிர்த்து வந்த ராகுல்காந்திக்கு நேற்று காவேரி மருத்துவமனையில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
திமுக தலைவர் கருணாநிதியை கடந்த பல ஆண்டுகளாகவே தீயசக்தி என்று பட்டப்பெயர் சூட்டி அழைத்தவர்கள் அதிமுகவினர். அந்த கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் தம்பிதுரை மற்றும் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்துசென்றபோது திமுகவினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் எப்போதும் அண்ணன் தலைவர் கலைஞர் என்று கூறிவரும் வைகோவிற்கு மட்டும் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த வைகோ வாகனம் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். பல திமுக தொண்டர்கள் செருப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு வைகோவைப் பார்த்து காட்டினர். வைகோவை பார்த்து துரோகி என்றும் கூச்சலிட்டனர்.
திமுகவினரின் அநாகரிகமான செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த வைகோ, உடனடியாக காரில் ஏறி திரும்பி சென்றார். திமுக, மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அரசியல் தளத்தில் எதிர்எதிர் துருவங்களில் பயணித்தாலும் திமுகவினரின் இதுபோன்ற அநாகரிகமான செயல் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.