மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைகோவிற்கு என்ன நடந்தது...பரபர தகவல்கள்!
மலேசியாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாட்டிற்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவரா என்பன உள்பட பல கேற்விகளை மலேசிய குடிவரவு அதிகாரிகள் கேட்டதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் இராமசாமி மகளின் திருமண வரவேற்பு ஜூன் 10ம் தேதி பினாங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு 11.55 மணிக்கு வைகோ சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்றுள்ளார்.

இன்று காலை 6.30 மணியளவில் விமான நிலையம் சென்ற அவரிடம் மலேசிய குடியுரிமை அதிகாரிகள் நீங்கள் மலேசிய நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதிகாரிகள் சிலர் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று வைகோவிடம் கேட்டுள்ளனர்.
இலங்கை குடிமகனா?
மேலும் இலங்கையில் வைகோ மீது பல வழக்குகள் உள்ளதாகவும் பலர் இதே கருத்தைத் தான் வைகோ பற்றி கூறுவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு தான் இந்திய குடிமகன் என்று வைகோ பதில் அளித்துள்ளார்.
பாஸ்போர்ட் பறிமுதல்
எனினும் ஆபத்தானவர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக கூறி வைகோவின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பறித்து வைத்துள்ளனர். இதனையடுத்து பினாங்கு மாநில துணை முதல்வர் தலையிட்டு வைகோவை அனுமதிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் துணைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே உத்தரவு வந்துள்ளதால் அனுமதிக்க முடியாது என்று குடியுரிமை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தனி அறையில் சிறைவைப்பு
இதனையடுத்து வைகோவை அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள உணவகத்திற்கு கூட அனுமதிக்கவில்லையாம். அவருடன் சென்ற உதவியாளர் அருணகிரிக்கு மட்டும் மலேசிய விசா உள்ளதால் அவர் சென்று சாப்பிட்டு விட்டு வைகோவிற்கும் வாங்கி வரலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் தான் எதுவும் சாப்பிட விரும்பவில்லை என்று வைகோ மறுத்துவிட்டாராம்.
கெடுபிடி
வைகோவை யாரையும் சந்திக்கக் கூட அனுமதிக்காமல் கடும் கெடுபிடி காட்டியுள்ளனர் மலேசிய குடியுரிமை அதிகாரிகள். இதனையடுத்து இன்று மறு விமானத்தில் இன்று இரவு பத்தரை மணிக்கு வைகோ சென்னை வர உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications