கலிங்கபட்டியில் குவிந்த மதிமுக நிர்வாகிகள்... கட்சி மாறுபவர்களை தடுப்பாரா வைகோ?
மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெறுகிறது மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவராக திமுகவிற்கு தாவி வருகின்றனர். கட்சி மாற நினைக்கும் மாவட்ட செயலாளர்களை வைகோ நீக்கி வருகிறார். கடந்த ஒருவாரத்தில் மட்டும் 4 மாவட்ட செயலாளர்களை இழந்துள்ளது மதிமுக. சில நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான .சூழ்நிலையில் மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று கலிங்கபட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
2016 சட்டசபை தேர்தலை ஐந்து கட்சி கூட்டு இயக்கத்துடன் இணைந்து சந்திக்க உள்ளதாக வைகோ அறிவித்தார். கம்யூனிஸ்ட்கள் தயாராக இருந்தாலும், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா இந்த கூட்டணிக்கு வர தயாராக இல்லை. அதேபோல விடுதலை சிறுத்தைகளும் இந்த கூட்டணியில் இருந்து விலகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே ஆளுக்கொரு திசையில் பயணிக்க உள்ள இந்த ஐந்து கட்சிகளும் சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் 2016 சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றிய தனது முடிவை வைகோ மாற்றி அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மாவட்ட செயலாளர்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications