பாஜக சொல்லும் பொது சிவில் சட்டத்தை மதிமுக ஒருபோதும் ஏற்காது: வைகோ
நெல்லை: பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தை மதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
தென்காசி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து, சுரண்டையில் வெள்ளிக்கிழமை அவர் பேசியது:
முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என அனைத்து நதிநீர் பிரச்னையிலும் தமிழக நலனுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறேன். தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருகிறது.

மோடி அரசு அமையவேண்டும்
மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுப்பது குறையவில்லை. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த தளபதிகள், இலங்கை ராணுவ தளபதியைச் சந்திப்பது ஒரு புறம் நடக்க, மறுபுறம் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. இதைத் தடுக்க வேண்டுமானால் வாஜ்பாய் அரசுபோல மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமைய வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு தொழுமை
தொடர்ந்து, தென்காசி மற்றும் செங்கோட்டையில் பேசிய வைகோ, ராணுவத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்ல வேண்டும் என்று நான் தெரிவித்தபோது, உடனடியாக அதற்கு அனுமதி வழங்கியவர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்.
தனி ஈழம் நம் கொள்கை
இலங்கையில் தனி ஈழம் என்பது நம்முடைய கொள்கை. ஆனால், நம்முடைய கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இந்தக் கொள்கையை ஏற்க வேண்டும் என நாம் கருத முடியாது. எல்லோருக்கும் ஒரே கொள்கை என்றால் இங்கு பல கட்சிகள் எதற்கு?
பொது சிவில் சட்டம்
தமிழீழத்தை பாஜக ஏற்றுக் கொள்ளுமா என்று சிலர் என்னிடம் கேட்கின்றனர். அதை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ, அதேபோல பொது சிவில் சட்டத்தை மதிமுக ஏற்றுக் கொள்ளாது என்றார் வைகோ.
நரேந்திர மோடிதான் பாதுகாப்பு
மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும் என்ற பொதுவான நோக்கத்துடன் நாம் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். இஸ்லாமியர்களுக்கு நரேந்திர மோடி அரசுதான் முழுமையான, பாதுகாப்பான அரசு என்பதை பல்வேறு புள்ளி விவரங்களுடன என்னால் தெரிவிக்க முடியும்.
காங்கிரஸ் துரோகம்
இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் மத்திய அரசு நமக்கு இழைத்த துரோகத்தை மோடி ஆட்சிக்கு வந்தால் செய்ய மாட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications