ஓகி புயலில் சிக்கிய கன்னியாகுமரியை மீட்க போர்கால வேகத்துடன் செயல்பட அரசுக்கு வைகோ கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் போர்கால வேகத்தில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்க வைகோ வலியுறுத்தி உள்ளார்.
கன்னியாகுமரி: தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு போர்கால வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 48 மணி நேரமாக பல மாவட்டங்களில் மின்சாரம் முழுமையாகத் தடைப்பட்டுள்ளது; போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. ரப்பர் தோட்டங்கள். வாழை, தென்னை, கரும்புத் தோட்டங்கள், நெல் வயல்கள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. மழையால் இதுவரை 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.

வேலை இழந்த விவசாயிகள்
கொடுமுடியாறு, சேர்வலாறு, கடனா அணை, பாபநாசம் அணை திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்களும், கண்மாய்களும் நிரம்பி மறுகால் பாய்கிறது. பல குளங்கள் உடையும் அபாய நிலையில் உள்ளன. மீனவர்கள், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் முழுமையாக வேலை இழந்துள்ளனர்.

மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை
எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும், மேலும் உயிர் இழப்புகள் ஏற்படாத வகையில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். கரையோரப் பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு, உடை வழங்க வேண்டும்; தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும்.

பயிர்க்கடன் ரத்து
மேலும் பயிர் காப்பீட்டு செய்தோர், காப்பீடு செய்யாதோர் என்ற பேதமின்றி அனைத்து விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கிட வேண்டும்; பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும். வீடுகளை இழந்தோருக்கும், கால்நடைகளை இழந்தோருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.

ம.தி.மு.க தொண்டர்களுக்கு வேண்டுக்கொள்
இதுவரை நான்கு பேர் பலியாகி இருக்கும் நிலையில், அரசு போர்க்கால வேகத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 இலட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதுடன், மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் தத்தமது பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications