பாஜக அணியில் 8 சீட்டுக்குப் போராடிப் பார்த்து 7க்கு படிந்த வைகோ
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் 8 சீட்டுகளை வாங்கிவிட படாதபாடுபட்டு கடைசியாக 7சீட்டுக்கு வேறவழியே இல்லாமல் ஒப்புக் கொண்டிருக்கிறது மதிமுக.
லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் முதலில் துண்டை போட்டு இடம்பிடித்தது மதிமுக. கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவதற்காக மாதக் கணக்கில் காத்திருக்கவும் செய்தது மதிமுக.
ஒரு கட்டத்தில் மதிமுகவை த்ராட்டில் விட்டுவிட்டது பாஜக. இதனால் கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. பின்னர் ஒருவழியாக மதிமுகவையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

5ல் தொடங்கிய பாஜக
மதிமுக 12 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்தது. ஆனால் பாஜகவோ 5ல் ஆரம்பித்தது. 8-க்கும் குறைவான தொகுதிகள் எனில் பேசவே வேண்டாம் என்றும் மதிமுக தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

7க்கு ஒப்புக் கொண்ட மதிமுக
அதன் பின்னர் பாஜக பெரும் போராட்டம் நடத்தி மதிமுகவை 7 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறது. இப்படி மதிமுகவை 7 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள வைத்ததில் இருவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றன ஊடக வட்டாரங்கள்.

ஜெத்மலானி காரணம்?
மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு மிக நெருக்கமான ராம்ஜெத்மலானி மூலம் 7 தொகுதிக்கு ஒப்புக் கொள்ள வைக்கப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

நானே காரணம் -தமிழருவி
ஆனால் கூட்டணிக்கு 'ஏற்பாடு' செய்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனோ, தாமே வைகோவிடம் போராடி 7 சீட்டுக்கு சம்மதிக்க வைத்தேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
7 சீட்டுக்காகவா இத்தனை மாதம் போராடியது மதிமுக?












Click it and Unblock the Notifications