மோடி அமைச்சரவையில் மதிமுக இடம் பெறும்: வைகோ
சென்னை: பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க 7 தொகுதிகளில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, ஆட்சி மன்றக் குழு மற்றும் உயர்நிலைக் குழுவின் கூட்டம், கட்சித் தலைமையகமான சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியல் ஆலோசனைக் குழு நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சார வியூகம், வெற்றி வாய்ப்புகள் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தினார்.
அமைச்சரவையில் பங்கேற்பு
கூட்டத்தில் பேசிய திருப்பூர்.சு.துரைசாமி, மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனை பொதுச்செயலாளர் வைகோ ஆமோதித்தார். இதைத் தொடர்ந்து பேசிய வைகோ கூறியதாவது:

தேசிய ஜனநாயக் கூட்டணி
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற மதிமுக பாடுபட வேண்டும்.
தேசிய ஜனநாயக் கூட்டணி 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். நரேந்திர மோடி பிரதமராவது உ.றுதி.

நரேந்திர மோடி பேச்சு
பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கும் போது 9 தொகுதிகளைக் கேட்டோம். பின்னர் அது 8 தொகுதிகளாகக் குறைக்கப்பட்டது. கூட்டணிக்கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டி 7 தொகுதிகளைக் கொடுக்க முன் வந்தனர்.
ராம்ஜெத்மலானி சமாதானம்
ஆனால் நான் 8 தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தினேன். அந்த நேரத்தில் ராம் ஜெத்மலானியிடம் பேசிய நரேந்திர மோடி நிலைமையை எடுத்துக் கூறி 7 தொகுதிகளை பெற்றுக் கொள்ளச் சொல்லுமாறு கூறினார்.
7 தொகுதிகளுக்கு சம்மதம்
நான் டெல்லி சென்றிருந்த போது ராம்ஜெத்மலானி அவர்களும் என்னிடம் இதை தெரிவிக்கவே நான் 7 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்தேன். அவை அனைத்தும் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றார் வைகோ.
2016ல் நம் தலைமையில் ஆட்சி
2016ம் ஆண்டு தமிழ்நாட்டில் நமது தலைமையில் கூட்டணி அமையும், மதிமுக ஆட்சிக் கட்டிலில் அமரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் வைகோ கூறினார்.
வேட்பாளர்கள் யார்? யார்?
மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்பது உறுதி செய்யப்பட்ட உடன் வேட்பாளர்கள் யார்? யார் என்பது நாளைக் காலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications