கரூர் மாவட்ட செயலாளர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: 10 மதிமுக நிர்வாகிகள் ராஜினாமா
கரூர்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பதில், தன்னுடைய முடிவுக்கு எதிராக செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நீக்கி வருகிறார், நேற்று கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் பரணி கே.மணியை வைகோ வெளியேற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோர் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி மாநில, ம.தி.மு.க., பொறுப்புக் குழு தலைவராக இருந்த ஹேமா பாண்டுரங்கனை, திங்கட்கிழமையன்று கட்சியில் இருந்து நீக்கிய வைகோ, கரூர் மாவட்ட செயலராக நீண்ட காலம் பணியாற்றிய பரணி கே.மணியை நேற்று நீக்கினார். பரணி கே.மணி, தி.மு.க.,வினருடன் நெருக்கமாக இருப்பதாக, தகவல் வெளியானதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தவறான முடிவு
தான் நீக்கப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பரணி கே.மணி, ம.தி.மு.க.,வை துவக்கிய போது, கட்சிக்கு வந்தவன் நான். 'பல பொறுப்புகளில், சிறப்பாக பணியாற்றியவன்' என, வைகோவால் பாராட்டப்பட்டவன். சமீப காலமாக, வைகோ தவறான முடிவுகளை எடுத்து வருகிறார்; மாற்றி மாற்றி பேசுகிறார்; நிலையாக செயல்பட மறுக்கிறார்.
வைகோ அழித்துவிடுவார்
யாரையும் நம்புவதும் இல்லை; கலந்து பேசி முடிவெடுப்பதும் இல்லை; வைகோவின் இந்த போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை. அதனால், விமர்சித்தோம்; உடனே, கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இதனால், சந்தோஷமாக இருக்கிறேன். வைகோ, தான் துவக்கிய கட்சியை, தானே அழித்து விடுவார். விரைவில், என் ஆதரவாளர்களுடன், தி.மு.க.வில் இணைவேன் என்றார் பரணி கே.மணி.
மதிமுகவில் சலசலப்பு
பரணி கே. மணி மீதான நடவடிக்கை கரூர் மாவட்ட ம.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீக்கப்பட்ட பரணி கே- மணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே பரணிமணிக்கு ஆதரவாக ம.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.
10க்கும் மேற்பட்டோர் ராஜினாமா
கரூர் நகர செயலாளர் பாலமுருகன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருள் முருகன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முரசு ராமச்சந்திரன், பரமத்தி ஒன்றிய பொருளாளர் ராஜா மணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சேகர், துணை அமைப்பாளர் அஜய் முருகவேல், கூடலூர் ஊராட்சி மன்ற துணை தலைவரும், கிளை செயலாளருமான பழனிசாமி, கரூர் நகர பொருளாளர் சின்னு உள்பட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.
பேச்சு வார்த்தை
மதிமுகவில் இருந்து மேலும் பலர் விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே ம.தி.மு.க. தரப்பில் இருந்து சஞ்சலத்தில் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைக்க தலைமையில் இருந்து பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications