வீதிக்கு வந்தது கூட்டணி முறிவு- இப்தார் நோன்பு விழாவில் விஜயகாந்த்தை புறக்கணித்தது மதிமுக
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதை உறுதிப்படுத்தும் வகையில் மதிமுகவின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு விஜயகாந்த் அழைக்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தமாகா, தேமுதிக ஆகியவை மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளன.
இருப்பினும் தமாகா, மக்கள் நலக் கூட்டணியில் இருப்பதாக போக்கு காட்டிக் கொண்டே மாற்று அணிக்கு முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் வரும் 24-ந் தேதியன்று மதிமுக சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்பிதழில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமாகா தலைவர் வாசன், இடதுசாரி தலைவர்கள் ஜி ராமகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.
இதனால் தேமுதிக இந்த அணியில் இருந்து வெளியேறிவிட்டது உறுதியாகி உள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாசனிடமும் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் வாசனோ, என்னை அழைத்தார்கள்.. நான் செல்கிறேன் என்றூ மட்டும் கூறினார்.
ஆக ஒரு விக்கெட் அவுட்!