மதிமுக சார்பில் நவ.20-ல் மாநில சுயாட்சி மாநாடு- திமுகவுக்கும் அழைப்பு: வைகோ
மதிமுக சார்பில் நவம்பர் 20-ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அந்த மாநாட்டுக்கு திமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை: மதிமுக சார்பில் நவம்பர் 20-ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ள மாநில சுயாட்சி மாநாட்டுக்கு திமுகவுக்கு அழைப்பு விடுப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் நவம்பர் 20-ம் தேதி சுயாட்சி மாநாடு நடைபெறும். தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, அகாலிதளத்தின் பாதல், கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள், வட கிழக்கு மாநிலங்களின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
கேடுகள் இழைக்கும் மத்திய அரசு
எந்தெந்த வகையில் மத்திய அரசு மாநில உரிமைகளை பறிக்கிறது என்பது குறித்து மாநில சுயாட்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படும். மத்திய அரசு பல்வேறு கேடுகளை தமிழகத்திற்கு விளைவித்துள்ளது.
பல மாநிலங்களில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு
ஒரே மொழி, ஒரே கலாசாரம் என மத்திய அரசு செயல்படுகிறது. நவோதயா பள்ளிகளைத் திறக்க, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க மதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல மாநிலங்களில் இந்தியை எதிர்க்க வேண்டிய நிலை தற்போது அதிகமாகி உள்ளது.
மாநில சுயாட்சி மாநாட்டில் திமுக
மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தலைவர்களை அழைத்துள்ளோம். மாநில சுயாட்சியை ஆதரிக்கும் திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களையும் மாநாட்டுக்கு அழைக்கிறோம்.
கருணாநிதி பெயர் நீக்கம் தவறானது
பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவை மாநில சுயாட்சி மாநாட்டுக்கு அழைத்துளோம். மாநில மொழிகளை ஆட்சி மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். சிவாஜி சிலை பீடத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி பெயரை நீக்கியது தவறு. இவ்வாறு வைகோ கூறினார். திமுகவின் முரசொலி பவளவிழா பொதுக் கூட்டத்துக்கு கருணாநிதி, ஸ்டாலின் ஆகியேரின் அழைப்பை ஏற்று வைகோ கலந்து கொண்டார். இதனடிப்படையில் மதிமுகைவ்ன் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வைகோ திமுகவுக்கு அழைப்பு விடுவதாக தெரிவித்துள்ளார்.