வைகோவுடன் மோதல்: ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு தி.மு.க.வில் இணைந்தார்!
சென்னை: தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து வைகோ விலகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
ம.தி.மு.க.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
இதுகுறித்து பாலவாக்கம் சோமு கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலை தி.மு.க.வுடன் இணைந்து சந்திக்கலாம் என்று வைகோ சில மாதங்களாக கூறி வந்தார்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்காகவே மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் தொடங்கப்பட்டுள்ளது; சட்டசபை தேர்தலில் அதி.மு.க.வே வெற்றி பெறட்டும் என்று வைகோ பேசினார்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு ம.தி.மு.க. உதவி வருகிறது. தி.மு.க.,வில் இருந்து வைகோ விலகியபோது நானும் விலயகியது தவறான முடிவு என்பதை உணர்கிறேன். ஆகையால் தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு பாலவாக்கம் சோமு கூறினார்.