களை கட்டும் கும்பகோணம் மகாமகம்- பக்தர்களுக்காக 24 மணி நேர மருத்துவ முகாம்கள்
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக திருவிழாவில் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ முகாம்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பில், "கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புனித நீராட வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பன்முக சுகாதார நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை 24 மணி நேரமும் செயல்படும் 99 அடிப்படை வசதிகள் கொண்ட முகாம்கள், 5 அரசு மருத்துவமனை முகாம்கள், 34 நடமாடும் முகாம்கள் உள்பட 138 மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இம்முகாம்கள் வரும் 23 ஆம் தேதி வரை 3 பணிமுறைகளில் 3 மருத்துவரின் தலைமையில் செவிலியர், மருந்தாளுநர் உள்பட குழுவாக செயல்படும்.
முகாம்களில் அனைத்து வகையான அவசர சிகிச்சைகளும் மற்றும் சாதாரண நோய்களுக்கு சிகிச்சை வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. நாளை போலியோ தினம் என்பதால் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6 இணை இயக்குனர்கள் தலைமையிலான மருத்துவக்குழு தனித்தனியாக சென்று குடிநீரின் குளோரின் அளவை பரிசோதித்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்து வருகிறது. மேலும், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா, மருத்துவக் கழிவுகள் உடனுக்குடன் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்படுகிறதா, கொசுமருந்து தினசரி அடிக்கப்படுகிறதா, மருத்துவ முகாமைச் சுற்றி சுகாதாரம் முறையாக பேணப்படுகிறதா என்பதையும் தினசரி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் 6 மண்டலங்கலாக பிரிந்து பிற மாவட்டங்களிலிருந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்களும், 102 உணவு பாதுகாப்பு அலுவலர்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களுக்கும், உணவு விடுதிகள் போன்றவற்றில் உணவு தரமானதாக வழங்கப்படுவதை உறுதி செய்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மருத்துவக் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை சார்பாக மொத்தம் 2 ஆயிரத்து 472 மருத்துவ துறை சார்ந்த நபர்கள் மகாமக சிறப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.