விழுப்புரம் அருகே பரிதாபம்: சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை !
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி இயங்கி வந்தது. இக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் கல்லூரியின் அங்கீகாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் ரூ.2 லட்சம் வரை பணம் கட்டி படித்த பல மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அந்த கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் சரண்யா, ப்ரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதால், தாங்கள் கட்டிய தொகையையும், டி.சி.யையும் திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறையிடம் மாணவிகள் புகார் அளித்ததாகவும், மாணவிகள் கோரியப்படி கட்டணத் தொகையையும், டி.சி.யையும் திருப்பி அளிக்குமாறு கலெக்டர் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அக்கல்லூரி நிர்வாகம் கட்டணத் தொகையையும், டி.சி.யையும் தர மறுத்ததாக மாணவிகள் மற்றும் உள்ளுர் வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக சின்னசேலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி தாளாளர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.