நெருங்கும் தீபாவளி: நெல்லையில் புதிய வகை பட்டாசுகள் அறிமுகம்
நெல்லை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வகை பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விலை அதிகம் என்றாலும் அதைப்பற்றி கவரைப்படாமல் பொதுமக்கள் வாங்கிச் செல்வதால் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது.
தீபாவளி பண்டிகையில் பட்டாசுக்கு முக்கிய இடம் உண்டு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ரகங்களில் ஸ்பெஷல் பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்பட்டு தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. நெல்லையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் திருமண மண்டபங்களிலும், தற்காலிகமாக பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விதவிதமான பட்டாசுகள் நெல்லை கடைவீதிகளில் அணி வகுத்துள்ளன. மீட் நைட் ட்ரீம்ஸ், என விதவிதமான கலர்களில் வானத்தில் வெடித்து சிதறும் பேன்சி பட்டாசுகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
ஹாரிபார்டர் பட்டாசு
ஹரி பாட்டார் படத்தில் பச்சை பந்து மேலே செல்வது போல் ஹரி பாட்டார் ஸ்பெஷல் ரக பேன்சி பட்டாசு இந்தாண்டு விற்பனைக்கு வந்துள்ளது. மல்டி ஏரியல் ஷாட்டுகள் எனப்படும் பட்டாசுகளை அதிகம் வாங்கி செல்கின்றனர்.
மேஜிக் பட்டாசுகள்
இந்த ரக பட்டாசுகள் ஆறு முதல் 240 ஷாட்டுகள் வரை வெடிக்கும். இவை ஜவரி கோஸ்ட், இந்தியன் ஷாட், சடன் மேஜிக், 18 சோல்ஜர், ராயல் எம்பயர், தண்டர் பிளாஸ் போன்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
விலை அதிகம்தான்
ராயல் எம்பயர் என்ற பட்டாசு 140 ஷாட்டுகள் வரை தொடர்ந்து 6 கலர்களில் 6 நிமிடம் வரை வெடிக்கும். இந்த வகை பட்டாசு ஓன்றின் விலை ரூ.3 ஆயிரம் ஆகும். இது மட்டுமல்லாது 1000 ஷாட்கள் வெடிக்கும் பட்டாசு ஒன்று ரூ.12ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
களை கட்டிய விற்பனை
இதுகுறித்து சிவகாசி பயர் ஓர்க்ஸை சேர்ந்த வியாபாரிகள் சிலர் கூறுகையில் கடந்த ஆண்டு தரையில் கரி படியாத தரை சக்கரம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு பன்முறை வெடிக்கும் ஓரே பட்டாசு அதிகம் பேர் விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றனர். இதனால் பட்டாசு விற்பனையும் களை கட்டியுள்ளது.