சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் 'கீச்சர்கள்' (டுவிட்டர்கள்) சந்திப்பு!
சென்னை: தமிழ் டுவிட்டர்கள் மாநாடு மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதால் கீச்சர்கள் மதுரை நோக்கி கிளம்ப தயாராகிக்கொண்டுள்ளார்கள்.
டுவிட்டர் பயன்பாட்டால் எது நடந்ததோ இல்லையோ, டிஜிட்டல் பயன்பாட்டில் தமிழ் ஆட்சி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை பார்த்தபடியோ, கிரிக்கெட்டை ரசித்தபடியோ, தமிழிலேயே நண்பர்களுடன் அரட்டையடிக்க டுவிட்டர் பேருதவியாக உள்ளது. டுவிட்டர் நிறுவனம் ரூ.750 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக செய்தி வெளியானதும் அதிகம் பதட்டப்பட்டது தமிழ் டுவிட்டர் கீச்சர்கள் வட்டம்தான். அந்த அளவுக்கு அவர்கள் உணர்வோடு ஒன்றிப்போயுள்ளது டுவிட்டர்.
டுவிட்டரில் அரட்டை கச்சேரி நடத்தியதன் விளைவாக பிரபலமல்லாத சாமானியர்களும் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பாலோவர்களை பெற்றுள்ளனர். இதனால் நட்பு வட்டம் எல்லைகளை கடந்துவிரிந்துள்ளது. பல நாடுகள், மாநிலங்களில் வசித்தாலும் டுவிட்டர் தமிழர்களை ஒன்றிணைத்துக் கொண்டு உணர்வுகளை பங்கிட்டுக்கொண்டுள்ளது.
இதைக் கொண்டாட ஒரு வாய்ப்பாக தமிழ் கீச்சர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 11ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, மதியம் 3 மணிக்கு மதுரை ஹெரிட்டேஜ் ரெசிடென்சி ஹோட்டலில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான தமிழ் டுவிட்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதெல்லாம், மதுரைக்கு டிக்கெட் போட்டாச்சா... என்பதுபோன்ற கருத்துக்களைத்தான் டுவிட்டரில் பரிமாறிக்கொண்டுள்ளனர். கடந்தாண்டு கோவையிலும், அதற்கு முந்தைய ஆண்டு சென்னையிலும் தமிழ் டுவிட்டர்கள் சந்தித்து மகிழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications