குடித்துவிட்டு வகுப்பிற்கு வந்த 4 மாணவர்கள்- டிசி கொடுத்த ஹெச்.எம்.க்கு மெமோ கொடுத்த கல்வி அதிகாரி!
நாமக்கல்: நாமக்கல்லில் மது போதையில் வகுப்பிற்கு வந்த பிளஸ் 2 மாணவர்கள் 4 பேருக்கு டிசி வழங்கிய தலைமையாசிரியைக்கு மெமோ வழங்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 4 மாணவர்கள் மது குடித்து விட்டு வந்து வகுப்பறையில் ஆசிரியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து 4 பேரின் மாற்று சான்றிதழை கொடுத்து பள்ளியில் இருந்து அவர்களை அதிரடியாக நீக்கினார். அதன் பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து பள்ளியில் மாணவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள்.
ஆனால் அதற்கு தலைமை ஆசிரியை மறுத்துவிட்டார். இதையடுத்து நீக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் பெற்றோருடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டார். அப்போது மாணவனை கண்டித்த கலெக்டர் தட்சிணாமூர்த்தி 4 மாணவர்களையும் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கோபிதாஸ் கூறும் போது, "மாணவர்கள் பள்ளியில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால் தலைமை ஆசிரியை 4 மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளார். மாணவர்கள் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதை தலைமை ஆசிரியையிடம் தெரிவித்து உள்ளேன்" என்றார்.
இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் குறிப்பிட்ட தலைமையாசிரியைக்கு மாணவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளக் கோரி குறிப்பாணை ஒன்றினை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications