ரூ.2000 நோட்டுக்கு பதில் ரூ.20 நோட்டு... கோவை ஆக்ஸிஸ் ஏடிஎம்மில் பணம் எடுத்தவர் அதிர்ச்சி!
கோவை ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டுக்கு பதில் ரூ.20 நோட்டு வந்ததால் வியாபாரி ஒருவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
கோவை: கோவை பீளமேடு ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் ஒன்றில் ரூ.2000 நோட்டுக்கு பதில், ரூ.20 நோட்டு வந்ததால் வியாபாரி ஒருவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
கோவை பீளமேடு சவுரி பாளையத்தை சேர்ந்தவர் காளிதாஸ். வியாபாரியான இவர் நேற்று மாலை தன்னிடமிருந்த 2 ஏ.டி.எம்.கார்டை கொண்டு சவுரிபாளையத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். 2 கார்டையும் பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் வீதம் 6 முறை ரூ.60 ஆயிரம் எடுத்துள்ளார்.
அப்போது முதல் 5 முறை தலா ரூ.10 ஆயிரம் எடுத்த போது ஒவ்வொரு முறையும் நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ஒரு 20 ரூபாய் நோட்டுமாக மொத்தம் ரூ.40 ஆயிரத்து 100 வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த காளிதாஸ் பின்னால் நின்றவரிடம் பணம் எடுக்குமாறு வழிவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து 6-வது முறையாக ரூ.10 ஆயிரம் எடுத்த போது சரியாக ஐந்து 2 ஆயிரம் நோட்டுகள் வந்தன.
2 கணக்குகளில் இருந்தும் மொத்தம் ரூ.60 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு மெசேஜ் வந்தது. ஆனால் அவருக்கு மொத்தம் ரூ.50 ஆயிரத்து 100 மட்டும் ஏ.டி.எம். மூலம் கிடைத்துள்ளது.
இது குறித்து கூறிய காளிதாஸ், "நான் அவசர மருத்துவ தேவைக்காக பணம் எடுக்க வந்தேன். முதல் 3 முறை பணம் எடுத்த போது ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் ரூ.20 கலந்து வந்ததை பார்க்கவில்லை.
4-வது முறை பணம் எடுத்த போது தான் கவனித்தேன். உடனே நான் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த பணத்தை சரி பார்த்த போது ஒவ்வொரு முறை ரூ.10 ஆயிரம் எடுத்த போதும் நான்கு 2 ஆயிரம் ரூபாயுடன் ஒரு 20 ரூபாயும் சேர்ந்து வந்திருந்ததை கண்டு பிடித்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது.
ஏ.டி.எம்.மில் 20 ரூபாய் நோட்டுகள் எவ்வாறு வந்தது? என்பது புதிராக உள்ளது. வங்கி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அவர்கள் யாரும் வரவில்லை. எனவே வங்கி கிளைக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய உள்ளேன்." என்று தெரிவித்தார்.
ரூ.2000 நோட்டுக்குப்பதில், ரூ.20 நோட்டு ஏடிஎம்மில் வந்ததால் வாடிக்கைகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.