கவனம்! சென்னை மெட்ரோ! வாகனத்தில் சென்றால்.. இனி மெட்ரோ பயண அட்டை கட்டாயம்! ரொக்கம் ஏற்கப்பட மாட்டாது
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே மெட்ரோ பார்கிங் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக நமது சென்னை இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பாதல் நெரிசலும் அதிகரித்தே வருகிறது.
என்னதான் சாலைகள் விரிவாக்கம் செய்தாலும், மக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைப்பது மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் ஒரே வழி என்பது வல்லுநர்களின் கருத்தாகும்.

சென்னை மெட்ரோ
இதற்காக வாகன நெரிசலைக் குறைக்கத் தமிழ்நாடு அரசு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் இப்போது ஏற்கனவே பஸ், மின்சார ரயில்களுடன் மெட்ரோ போக்குவரத்து முறையும் உள்ளது. நெரிசல் மிக்க நேரங்களிலும் நகர டிராபிக்கை ஈஸியாக கடந்து செல்ல மெட்ரோ மக்களுக்குப் பெரியளவில் உதவுகிறது. 2007-2008 காலகட்டத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு முதல் சென்னையில் மெட்ரோ படிப்படியாகச் செயல்பாட்டிற்கு வந்தது.

பயணிகள் எண்ணிக்கை
நாட்டிலேயே 4ஆவது நீளமான மெட்ரோ வழித்தடம் சென்னையில் தான் இருக்கிறது. இப்போது சென்னையில் மெட்ரோ இரண்டு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம், சென்டரல் முதல் பரங்கிமலை வரை என்று இரண்டு வழித்தடங்களில் 40+ மெட்ரோ நிலையங்களுடன் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்னையில் மெட்ரோ ரயில்கள் செயல்பட்டு வருகிறது. அடுத்து புதிதாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ கட்டுமானம் நடந்து வரும் நிலையில், மெட்ரோ சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

பார்கிங் கட்டணம்
பயணிகளின் மெட்ரோ நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்து வருகிறது. இதனிடையே மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி மெட்ரோ பார்கிங்கில் கட்டணம் செலுத்த மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவே இந்த நடைமுறையை அமல்படுத்த உள்ளனர்.

மெட்ரோ அட்டை கட்டாயம்
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அனைத்து மெட்ரோ ஸ்டேஷன்களிலும் இருக்கும் பார்கிங் இடங்களிலும் பார்கிங் கட்டணம் வசூலிக்கப் பணத்திற்குப் பதிலாக மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப் புழக்கத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எங்கே பெற்றுக் கொள்ள முடியும்
பார்கிங் ஏரியாக்களில் வாகனத்தை வேகமாக இயக்குவதையும் இதன் மூலம் தடுக்கப்படும். மேலும், பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையும் இதன் மூலம் ஏற்படுத்தப்படும். இந்த மெட்ரோ அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதே அட்டையைப் பயன்படுத்தி நாம் மெட்ரோ ரயில்களில் பயணங்களையும் மேற்கொள்ளலாம். இதே இடங்களிலும், சென்னை மெட்ரோ இணையதளத்திலும் இந்த அட்டைக்கு டாப்அப் ரீசார்ஜும் செய்து கொள்ளலாம். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

மீனம்பாக்கம் மெட்ரோ
அதேபோல இப்போத சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால் மீனம்பாக்கம் மெட்ரோ பார்கிங் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. இதற்குப் பதில் பயணிகள் பரங்கிமலை மெட்ரோ, நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பட்ட பார்கிங்கில் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications