விவசாயம் என்றாலே கண்ணீர்தானா.. மேட்டுப்பாளையம் விவசாயிகளின் அவலத்தை பாரீர்!
நீரில் மூழ்கிய வாழைகளை பரிசலில் சென்று விவசாயிகள் அறுத்தனர்.
கோவை: நீரில் மூழ்கிய வாழைகளை பரிசலில் பயணம் செய்து அறுத்துக் கொண்டு வந்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் மேட்டுப்பாளையம் விவசாயிகள்.
கடந்த ஓரிரு மாதமாக கோவை மாவட்டத்தில் கன மழை பெய்து வெளுத்து கட்டி வந்தது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானிசாகர் அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இது மாவட்ட மக்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், வாழை விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையும், கவலையையும்தான் கொடுத்துள்ளது.

அறுவடைக்கு தயார்
காரணம், இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில்தான் விவசாயிகள் வாழைகளை சாகுபடி செய்துள்ளனர். சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் அனுமதியுடன்தான் விவசாயிகள் வாழைகளை பயிரிட்டனர். கண்போல காத்து வந்தநிலையில், அறுவடைக்கும் வாழைகள் தயாராக இருந்தது.

நீரில் மூழ்கிய வாழைகள்
அந்த நேரத்தில்தான் கனமழை கொட்ட தொடங்கியது. இதில் சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் நீரில் மூழ்கின. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர் வாழை விவசாயிகள். இந்த வாழைகளை நம்பித்தான் விவசாயிகள் நாட்களை கடத்தி வந்தனர். ஆனால் அவை தண்ணீரில் மூழ்கிவிட்டதால் வேதனையில் தற்போது கண்ணீர் வடித்து நிற்கின்றனர். சேதமடைந்த வாழைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

மிச்சமிருக்கும் வாழைகள்
அறுவடைக்கு தயாரான வாழைகள் நீரில் மூழ்கிவிட்டாலும், மூழ்காமல் நீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வாழை தார்களையாவது வெட்டி எடுக்கலாம் என விவசாயிகள் முடிவு செய்தனர். அதற்காக கிளம்பி செல்லலாம் என்றால் ஏக்கர் கணக்கில் உள்ள வாழை தோட்டங்கள் எல்லாமே தண்ணீராக கிடப்பதால் எப்படி செல்வது என சிக்கல் ஏற்பட்டது.

பரிசல்களில் பயணம்
அதனால் பரிசல்களை ஏற்பாடு செய்து அதில் ஏறி வாழை விவசாயிகள் சென்றனர். தங்களது தோட்டங்களில் மிச்சம் மீதி நீருக்கு வெளியே தெரியும் வாழை தார்களை வெட்டி எடுத்துக் கொண்டு வந்தனர். என்றாலும், இந்த வாழை தார்களால் ஓரளவுதான் நிலைமையை சரிக்கட்ட முடியும் என்பதால், உரிய இழப்பீடு அரசு அளித்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று கண்ணீர் மல்க கேட்கின்றனர்.












Click it and Unblock the Notifications