90 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படும் மேட்டூர் அணை.. விவசாயிகளின் நீண்டகால கனவு நிறைவேறப் போகுது
மேட்டூர்: மேட்டூர் அணை 90 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தூர்வாரப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் அணையின் குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் மிகப்பெரிய அணையாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மிகப்பெரிய அணைகளின் பட்டியலிலும் மேட்டூர் அணை உள்ளது. காவிரியில் இருந்து கிடைக்கும் நீரின் மூலம் பல ஆயிரம் ஆண்டுகளாக டெல்டா பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு தொடங்கி 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கர்னல் எல்லீஸ் வடிவமைப்பின்படி 4.5 கோடி ரூபாய் மதிப்பில் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த அணையின் உயரம் 120 அடி. நீளம் 1700 மீட்டர். 59.25 சதுர மைல் பரப்பில் இந்த அணையில் நீர் தேங்கி வைக்கப்படுகிறது. இந்த அணையில் 93.5 டிஎம்சி நீரை தேக்கி வைக்க முடியும் இது கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றில் இருந்து பல்வேறு மாவட்டங்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவீதம் மண் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு 90 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணை தூர்வாரப்படவுள்ளது.
மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையமும், நீர்வளத் துறையும் இணைந்து இந்த அணையைத் தூர்வாருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி மேட்டூர் அணையின் குறிப்பிட்ட பகுதியில் தூர்வாரப்படவுள்ளது.
சோதனை அடிப்படையில் அணையின் ஒரு பகுதியில் மட்டும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்கட்டமாக 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வாரப்படுகிறது. இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத் துறை ஏலம் கோரியுள்ளது. அனுமதி கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேட்டூர் அணையைத் தூர்வாரினால் 30 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் கூடுதலாக சேமிக்க முடியும் என்பதால் அணையைத் தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேட்டூர் அணையைத் தூர்வார 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications