மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.41 அடியாக உயர்வு… பாசனத்திற்கு நீர் திறப்பு எப்போது?
சேலம்: கர்நாடக அணைகளில் திறந்துவிடப்படும் உபரி நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.4 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு தற்போதைய நீர் வரத்து வினாடிக்கு 21,594 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையின் நீர் இருப்பு 54.27 டி.எம்.சி.யாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி அணை நிரம்பி வழிகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததை அடுத்து அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அணை நீர்மட்டம் உயர்வு
புதன்கிழமையன்று மாலை அணையின் நீர்மட்டம் 90.50 அடியாக உயர்ந்தது. இன்று காலை 25 ஆயிரத்து 591 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 91.41 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அருவியில் வெள்ளம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 3வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

போலீசார் கண்காணிப்பு
ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. தற்போது 22 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் யாரும் செல்லாத வகையில் கயிறு கட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

100 அடியை எட்டும்
நீர் வரத்து இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை சில தினங்களில் எட்டும். எனவே விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நீர் இருப்பு குறைவாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடிக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை.

விரைவில் திறப்பு
தற்போது கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பருவ மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும் அணைக்கு நீர் வரத்து திருப்திகரமாக இருப்பதால் விரைவில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடிப்பெருக்கு பண்டிகை
ஆடிப்பெருக்கு பண்டிகை வரும் 3ம் தேதி கொண்டாடபடுகிறது. காவிரி ஓடும் மாவட்டங்களில் இந்த விழாவை விமரிசையாக கொண்டாடுவார்கள். அன்று புதுமண தம்பதிகள், திருமணம் ஆக வேண்டிய பெண்கள், வாலிபர்கள் காவிரியில் நீராடி வேண்டுதல் செய்வார்கள். கடந்த ஆண்டு ஆடிப்பெருக்குக்கு சில தினங்கள் இருக்கும்போது தான் அணை திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் ஆடிப்பெருக்கு நாளில் திருவையாறு வரைதான் சென்றது. இதனால் மற்ற ஊர் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு அணைக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும் என்பதால் இப்போதே ஆடிப்பெருக்கு கொண்டாட தண்ணீர் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இந்த வாரத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications