மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 4,521 கன அடியாக அதிகரிப்பு! குடிநீருக்காக 1,000 கன அடி திறப்பு!
மேட்டூர்: காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை வெளுத்தெடுப்பதால் காவிரி நதிநீர் கரை புரண்டோடுகிறது. கர்நாடகா அணைகளில் இருந்தும் காவிரி நீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 4,521 ஆக அதிகரித்துள்ளது,
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் காவிரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகாவில் காவிரி நீர் தேக்கி வைக்கப்படும் கிருஷ்ண ராஜசாகர் (கேஆர்எஸ்), காவிரியின் கிளை நதியான கபிலா (கபினி) நதி மூலமாக காவிரி ஆற்றுக்கு வரும் நீர் தேக்கி வைக்கப்படும் கபினி அணைகள் வேகமாக நிரம்புகின்றன.

கர்நாடகாவில் இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையானது 102.8 அடியாக இருந்தது. இந்த கேஆர்எஸ் அணையின் மொத்த நீர் கொள்ளவு 124.8 அடியாகும். கபினி அணையின் மொத்த நீர் மட்டம் 65. இன்று காலை நிலவரப்படி 64 அடியாக உயர்ந்துள்ளது. கபினி அணை முழு கொள்ளவை எட்டுவதற்கு இன்னும் 1 அடிதான் உள்ளது. இதனால் கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்படுகிறது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5,000 கன அடி முதல் 6,000 கன அடி நீர் வரத்து இருக்கிறது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 4,521 ஆகவும் உள்ளது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடிநீர் குடிநீர் தேவைக்காகவும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 41.15 அடியாகவும் உயர்ந்தது.

முன்னதாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,341 கன அடியாக இருந்தது. தற்போது 450 கன அடிக்கும் அதிகமான நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 12.69 டிஎம்சியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications