மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு - கோடையில் நிரம்பும் அணையால் விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் அணை திறக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது.
சேலம்: தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை மளமளவென நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் 115 அடியாக உயர்ந்துள்ளதால் குறுவை சாகுபடிக்கு முன் கூட்டியே அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது.
காவிரி ஆற்றில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 1500 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியவுடன், கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பரவலாக பொழியத் தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

காவிரியில் பெருவெள்ளம்
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்து வந்தது. கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 50,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு
ஒகேனக்கல் பிரதான அருவி, அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், அருவி, ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4வது நாளாக தடை நீடிக்கிறது. ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணை மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 111 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 115 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 46 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேட்டூர் அணை இன்னும் சில தினங்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணை திறக்க வாய்ப்பு
கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு பெருவெள்ளம் ஏற்பட்டு அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே அணை திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications