குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படமாட்டாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருக்கும்பட்சத்தில் பருவமழையை நம்பி ஜூன் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனப் பகுதிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

ஜூன் 12-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடிக்காக 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறையும்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறந்துவிட இயலாது என்று கூறியுள்ளார்.
மேலும், மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 72.64 அடியாக மட்டுமே உள்ளது. கர்நாடகா காவிரியில் நீர் திறந்துவிட்டாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூன் இறுதியில் 79 அடிதான் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications