எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு பாடல்... சட்டசபையில் அதிமுக- திமுக எம்.எல்.ஏக்கள் ருசிகர விவாதம்
சென்னை: "ஊதாரிப் பிள்ளைகளை பெக்க மாட்டோம், அது ஊரு வம்பை வாங்கும்படி வைக்க மாட்டோம்.." என்று அதிமுக எம்.எல்.ஏ இ.ரத்தினசபாபதி பாடிய எம்.ஜி.ஆர். படப் பாடலுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டசபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டசபையில் மீன்வளம் மற்றும் பால் வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அறந்தாங்கி தொகுதி அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி , எம்.ஜி.ஆர். நடித்த ஒளிவிளக்கு படத்தின் பாடல் வரிகளை பாடினார்.

''ஊதாரிப் பிள்ளைகளை பெக்க மாட்டோம், அது ஊரு வம்பை வாங்கும்படி வைக்க மாட்டோம்..'' என்று பாடிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கமிட்டனர். இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் திமுக உறுப்பினர்களை அமைதிப் படுத்தினார்.
அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எழுந்து, அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக எம்.ஜி.ஆர். நடித்த 'ஒளிவிளக்கு' படத்தில் இடம்பெற்ற பாடலைத்தான் குறிப்பிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், யாரோ எழுதிக் கொடுத்ததற்கு அதிமுக உறுப்பினர் வாயசைத் துக் கொண்டிருக்கிறார். எனவே, அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.
உடனே செல்லூர் ராஜூ, யாரோ எழுதிக் கொடுத்த வரிகளுக்கு அவர் வாயசைக்கவில்லை. தான் நடித்த திரைப்படங்களில் சமூக அக் கறையுடன் தத்துவப் பாடல்களை இடம் பெறச்செய்தவர் எம்.ஜி.ஆர். அந்தப் பாடல் வரிகளைத்தான் ரத்தினசபாபதி சுட்டிக்காட்டினார் என்றார்.
இதற்கு ஸ்டாலின், பேரவையில் இதுபோன்ற நிலை நீடித்தால் நாங்களும் பழைய பாடல்களைப் பாட வேண்டிவரும். வேண்டுமானால் இதுபோன்ற பாடல்கள் பற்றி தனி விவாதம் நடத்தலாம். அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.
அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் எழுந்து, அதிமுக உறுப்பினர் இங்கே குறிப்பிட்ட படப் பாடல் திமுகவில் எம்.ஜி.ஆர். இருக்கும்போது வெளியானது. அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? எம்.ஜி.ஆர். தனது படங்களில், தூங்காதே தம்பி தூங்காதே... போன்ற ஏராளமான தத்துவப் பாடல்களை அறிமுகப்படுத்தினார். ஆனால், பராசக்தி படத்தில் நீங்கள் வேறு விதமான பாடல்களை அறிமுகப்படுத்தினீர்கள் என்று கூறினார்.
ஜெயக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ''திமுக பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தபோது ஒளி விளக்கு படம் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை நாங்கள் எதிர்க்கவில்லை. நானே இப்படத்தை மகாராஜா திரையரங்கில் பலமுறை பார்த்திருக்கிறேன் என்று கூறினார். சட்டசபையில் இவ்வாறு எம்.ஜி.ஆர் பாடல்களை வைத்து ருசிகர விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications