1972ல் எம்.ஜி.ஆர். ஆரம்பித்தது.. இன்று "கருப்பு எம்.ஜி.ஆரை" அசைத்துப் பார்க்கிறது!
சென்னை: கட்சிகள் உடைவதும், உடைக்கப்படுவதும், சிதறி சின்னாபின்னாமாவதும், இன்னொரு கட்சியுடன் இரண்டறக் கலப்பதும் தமிழக அரசியலில் சகஜமப்பா என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் தவறாமல் நடந்தேறும் சம்பவங்கள்தான்.
உண்மையில் தமிழக அரசியலில் இதை ஆரம்பித்து வைத்த புண்ணியம் எம்.ஜி.ஆருக்குத்தான் போய்ச் சேரும். 1972ல் முதல் முறையாக திமுக உடைந்து அதிமுக உருவானது. அதன் பிறகு தமிழக அரசியலில் பல பிளவுகள், உடைப்புகளை மக்கள் பார்த்து விட்டனர். தொடர்ந்து பார்த்துக் கொண்டுள்ளனர்.
முதலில் அதிமுக வந்தது. அது பின்னர் ஜா.. ஜெ என உடைந்தது. எம்.ஜிஆர். அதிமுக வந்தது. எல்லாம் பின்னர் மறைந்தன. ஒன்றாகின. மதிமுக பிறந்தது. மதிமுக உடைந்தது. தேமுதிக வந்தது. இடையில் அது உடைந்தது. இப்போது மீண்டும் ஒரு உடைப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. லேட்டஸ்டாக தேமுதிக கதிகலங்கிப் போய்க் கிடக்கிறது.

1972ல் உடைந்த திமுக
தமிழக கட்சிகளின் வரலாற்றில் முதல் முறையாக உடைந்த பெருமை திமுகவுக்கே உண்டு. அதிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். 1972ம் ஆண்டு அதிமுகவை உருவாக்கினார். வரலாறும் படைத்தார்.

ஜா அணி.. ஜெ. அணி
எம்.ஜி.ஆர். மறையும் வரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக விளங்கியது. அவர் மரணத்திற்குப் பின்னர் அதிமுக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி தலைமையில் ஒரு அணியும் உருவாகின.

தனிக்கட்சி கண்ட திருநாவுக்கரசர்
இந்த நிலைியல் திருநாவுக்கரசர் பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கினார். பின்னர் இதைக் கலைத்து விட்டு அதிமுகவுக்கு வந்து சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர். கழகம்
அதேபோல ஆர்.எம். வீரப்பன் எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இன்று வரை அதை வைத்துள்ளார். இவரைப் போல மேலும் சிலரும் கட்சி தொடங்கி நடத்திப் பார்த்தனர்.

மதிமுக பிறந்தது
திமுகவிலிருந்து அதிமுக உருவானது ஒரு பிளவென்றால், அதற்கு அடுத்து வந்த பெரிய பிளவு வைகோவின் வெளியேற்றம் மற்றும் மதிமுகவின் உதயம். திமுகவைப் பாதித்த 2வது பெரிய பிளவு மதிமுகதான்.

காங்கிரஸ் உடைந்தது
அதேபோல காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார். மிகக் குறுகிய காலமே இந்தக் கட்சியை அவர் நடத்த முடிந்தது.

மீண்டும் பிறந்த தமாகா
2002ம் ஆண்டு தமாகாவை அவரது மகன் ஜி.கே.வாசன் காங்கிரஸுடன் இணைத்து தமிழக காங்கிரஸ் தலைவரானார். பின்னர் கடந்த ஆண்டு அவர் மீண்டும் காங்கிரஸை விட்டு வெளியேறி தமாகாவைத் தொடங்கினார்.

மனிதநேய மக்கள் கட்சி
சமீபத்தில் மனித நேய மக்கள் கட்சி உடைந்தது. தமிமுன் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயகக் கட்சி உருவாகி அதிமுகவுடன் கை கோர்த்து தேர்தல் களம் கண்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட உடைந்தது. புதிய கட்சி பிறந்தது. என்ன கொடுமை என்றால் இரு கட்சிகளும் தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ளன என்பதுதான்.

தேமுதிக இன்னும் உடையவில்லை
திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் உடைந்து புதிய கட்சிகள் உடைந்தது போல தேமுதிக இன்னும் உடையவில்லை. மாறாக அதிலிருந்து அவ்வப்போது முக்கியமானவர்கள் வெளியேறிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் இல்லாததால்
தேமுதிக உடைந்து சிதறாமல் இருக்க முக்கியக் காரணம் அங்கு முக்கியமான தலைவர்கள் என்று யாருமே இல்லாததே. இதன் காரணமாகவே அது உடையாமல் உள்ளது முக்கியமானது.












Click it and Unblock the Notifications