உயர்நீதிமன்ற நுழைவாயிலில் இருந்த "எம்.ஜி.ஆர். கோவில்" திடீர் இடிப்பு...!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நழைவாயிலில் கடந்த 27 வருடமாக இருந்து வந்த எம்.ஜி.ஆர். கோவில் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த நீதி கருமாரியம்மன் கோவில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நள்ளிரவில் இடித்துத் தள்ளப்பட்டது.
என்.எஸ்.சி சாலையில் நடைபாதையில் இந்த கோவில் இருந்தது. உயர்நீதிமன்ற நுழைவாயில் அருகே இந்தக் கோவில் இருந்தது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கடந்த 1984ம் ஆண்டு உடல் நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் காந்தா என்ற பெண் இக்கோவிலைக் கட்டினாராம். எம்.ஜி.ஆருக்காக கட்டப்பட்ட கோவில் என்பதால் எம்.ஜி.ஆர். கோவில் என்று இதை அழைக்கலாயினர்.

அன்று முதல் தினசரி பூஜை என்று இந்த கோவில் பிசியாக இருந்து வந்தது. அம்மன் சிலை, பெருமாள் போட்டோ, எம்.ஜி.ஆர். போட்டோவும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, இந்தக் கோவில் நடைபாதையில் இருப்பதால் பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக கூறி அதை அகற்ற வேண்டும் என்று வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சத்தீஸ்குமார், அக்னிகோத்ரி ஆகியோர் பெஞ்ச், கோவிலை இடித்துத் தள்ள உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு கோரிக்கை மனு வைக்கப்பட்டது. அதில், இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்ப்டிருந்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநகராட்சி தாக்கல் செய்துள்ள மனு ஆச்சரியம் அளிக்கிறது. அம்மன் கோவிலை ஒருவார காலத்துக்குள் இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு நீதிகருமாரியம்மன் கோவிலை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவிலை கட்டிய காந்தா மற்றும் ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர். கோவிலை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும், கோவிலை கட்டி 27 ஆண்டுகளாக பராமரித்து வந்த காந்தா கதறி அழுதார்.
அங்கு திரண்டிருந்த பக்தர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நேரத்தில் பக்தர் ஒருவர் தீக்குளிக்கவும் முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இரவு 10.30 மணி வரை பக்தர்கள் கோவில் முன்பு அரண்போல் நின்றிருந்தனர். நேரம் செல்ல செல்ல அனைவரும் கலைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து 11 மணிக்கு மேல் கோவிலை இடிக்க ஆரம்பித்தனர் அதிகாரிகள். அதிகாலை 3 மணியளவில் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது. தற்போது கோவில் இருந்த இடமே இல்லாமல் முற்றிலும் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.
முன்னெச்சரிக்கையாக தற்போது அங்கு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications