சென்னையில் பனிமூட்டம் ஜாஸ்தியாக இருப்பது ஏன்...?
சென்னை: சென்னையில் நேற்று முதல் பனி மூட்டம் ஜாஸ்தியாக உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இன்று லேசான மழை பெய்யும் என்றும் அது தெரிவித்துள்ளது.
நேற்று காலை சென்னையில் மக்களுக்கு பனி மூட்டக் காலையாக அமைந்தது. வழக்கமான பனி மூட்டம் என நினைத்தவர்களுக்கு அது 8 மணிக்கு மேலும் நீடித்ததால் குழப்பம் ஏற்பட்டது. அதேசமயம் சில இடங்களில் லேசான தூறலும் காணப்பட்டது.

இன்றும் அதேபோலத்தான் பல இடங்களில் அடர்ந்த பனி மூட்டமாக இருந்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், இது வழக்கமான ஒன்றுதான். குளிர்கால மாதங்களில் இதுபோல அடர்ந்த பனி மூட்டம் வருவது இயல்புதான்
இன்றும் அந்த பனிமூட்டம் தொடரும். மேலும் இரவில் பனிப் பொழிவு குறையும். வழக்கத்தை விட 2 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை கூடுதலாக இருக்கும்.
அரபிக் கடலிலிருந்து வரும் ஈரக் காற்றும், மத்திய இந்தியாவிலிருந்து வீசும் வறண்ட காற்றும் சங்கமிப்பதால்தான் சென்னையில் நேற்று முதல் மேகமூட்டமாக இருப்பதற்குக் காரணம். தமிழகத்தின் உட்புறப் சில இடங்களில் லேசான மழை இருக்கலாம். சென்னையில் வாரக் கடைசியில் லேசான மழையை எதிர்பார்க்கலாம். சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை காலையில் பனிமூட்டம் நிலவக் கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications