250 கிராம் பால் ரூ 50.. தண்ணீர் கேன் ரூ 50... காய்கறிகள் காலியாகிடுச்சி!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விதவிதமான செய்திகள் தீயாகப் பரவி வருவதால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன.
மார்க்கெட்டில் அத்தியாவசியப் பொருட்களே இன்று கிடைக்கவில்லை. கிடைத்தாலும் இரட்டிப்பு விலைக்கு விற்று வருகின்றனர்.
அரைலிட்டப் பால் பாக்கெட் விலை ரூ 80 வரை விற்கப்படுகிறது. சில கடைகளில் கால் லிட்டர் சிறு பால் பாக்கெட்டுகள் ரூ 50-க்கு விற்கப்படுகின்றன.
தண்ணீர்தான் மிக முக்கியத் தேவையாக உள்ளது. சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தண்ணீரின் விலையை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தி விற்று வருகின்றனர். பல பகுதிகளில் ரூ 25-க்கு விற்று வந்த தண்ணீர் ரூ 50-க்கு விற்கப்படுகிறது. கேட்டால் சப்ளை இல்லை என்று சாக்கு சொல்கின்றனர்.
நேற்று மாலையிலிருந்தே ஜெயலலிதா உடல்நிலை மோசம் என்று செய்தி பரவி வருவதால், இன்று மொத்தமாகக் கொள்முதல் செய்யாமல் விட்டுவிட்டனர் கடைக்காரர்கள். அதனால் ஸ்டாக்கில் இருந்த காய்கறிகளையே இரட்டிப்பு விலைக்கு விற்றுத் தீர்த்தனர்.
இன்று மாலை கடைகள், மார்க்கெட் பகுதிகளில் பெரும் கூட்டம் காய்கறி கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
இன்றே இந்த நிலைமை என்றால், நாளை எப்படியோ என்ற கவலை தோய்ந்த முகத்துடன் மக்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.