மின்சார அமைச்சர் தங்கமணி குரலில் பேசி டிரான்ஸ்பர்... மிமிக்ரி கலைஞர் கைது
தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி போல் மிமிக்ரி செய்து சேலம் அனல்மின் நிலைய அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்த மிமிக்ரி கலைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம்: மேட்டூர் அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் மின்துறை அமைச்சர் தங்கமணி போல் மிமிக்ரி கலைஞரை பேசவைத்து 28 பேரை இடமாற்றம் செய்து அதன் மூலம் பல கோடியை குவித்துள்ளர் அதிமுக நிர்வாகிகள். இந்த சம்பவம் மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூரில், 840 மற்றும், 600 மெகாவாட் அனல்மின் நிலையம் உள்ளது. அங்குள்ள என்ஜினியர்கள் பணியிடமாற்றத்துக்காக ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுவார்கள்.
ஒரு மாதத்துக்கு முன், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் உதவி என்ஜினியர் ஜெயக்குமாரை, நிலக்கரி கையாளும் பகுதியில் இருந்து, கொதிகலன் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம், மின்துறை அமைச்சர் தங்கமணி போல் ஒருவர் பேசியுள்ளார். அமைச்சரே கூறியதாக நம்பி அவரை கொதிகலன் பிரிவுக்கு, அதிகாரிகள் இடமாற்றம் செய்தனர். அங்கு நடந்த நிர்வாக குளறுபடியால், ஒரு வாரத்துக்கு முன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

என்ஜினியர் குழப்பம்
சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி, அவரது உறவினர்கள் மின்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளனர். இதைக்கேட்ட அமைச்சர், மின்வாரிய அதிகாரிகளிடம் அவர் எப்போது இடம் மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அதிகாரிகள் நீங்கள் தானே போனில் கூறினீர்கள். அதன் பேரில் இடமாற்றம் செய்ததாக கூறியுள்ளனர்.

அமைச்சர் தங்கமணி
அதிர்ச்சியடைந்த அமைச்சர் தங்கமணி, நான், அப்படி யாருக்காகவும் கீழ் மட்ட அதிகாரிகளிடம் போனில் பேசவில்லை. இதில் ஏதோ சதி நடந்துள்ளது. எனவே முறையாக விசாரித்து தனக்கு தெரியப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், அனல்மின்நிலைய ஆளும்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர், பொறியாளர்கள், ஊழியர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, திண்டுக்கலைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் சவரி முத்துவை பயன்படுத்தி மின்துறை அமைச்சர் போல், போனில் அதிகாரிகளிடம் பேசி, அவர்கள் விரும்பும் இடத்துக்கு மாற்றம் செய்தது தெரியவந்துள்ளது.

28 பேர் டிரான்ஸ்பர்
கடந்த 2 மாதத்தில் 28 பேர்களை இதேபோல் மிமிக்ரி குரலில் பேசி இடமாற்றம் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அமைச்சரின் குரலில் பேச திண்டுக்கலை சேர்ந்த மிமிக்ரியாளர் ஒருவரை பயன்படுத்தி இருப்பதும், உதவி பொறியாளர் இடமாற்றத்துக்கு மின்வாரிய அதிகாரிகளிடம் பேசியது அவர் தான் என்பதும் தெரியவந்தது.

கோடிகள் குவிப்பு
இதையடுத்து சமீபத்தில் இடமாறுதல் கேட்டு சென்றவர்கள் யார், யார் என்ற பட்டியலை எடுத்து மின் வாரிய விஜிலென்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மிமிக்ரி கலைஞரான சவரிமுத்துவை, நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக இருந்த போதே, அமைச்சர் போல் அதிகாரிகளிடம் பேசி, பலரையும் இடமாற்றம் செய்து, மின்வாரிய கடைநிலை ஊழியர்களாக உள்ள தொழிற்சங்க புள்ளிகள், கோடிகளை குவித்துள்ளதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிமிக்ரி கலைஞர் கைது
சவரிமுத்துவை கைது செய்த போலீசார், இந்த மோசடி, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மட்டும் நடந்ததா அல்லது மின்வாரியத்தின் வேறு அலுவலகங்களிலும் நடந்ததா என, ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications