இப்படி ஒரு மூக்கணாங்கயிறே இல்லாத இலாகாவை பார்த்ததில்லப்பா.. அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!
சென்னை : இந்த மாதிரி ஒரு மூக்கணாங்கயிறே இல்லாத இலாகாவை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று கனிமவளத்துறை பற்றி அமைச்சர் துரைமுருகன் பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று நீர்வளம், கனிமங்கள், சுரங்கங்கள் துறை அமைச்சர் துரைமுருகன், மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார் அமைச்சர் துரைமுருகன்.

அப்போது பேசிய துரைமுருகன், அலகாபாத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆறுக்கு பெயர் திரிவேணி சங்கமம். யமுனையும் கங்கையும் ஒன்றாக ஓடும். இன்னொரு ஆறு சரஸ்வதி ஆறு. அது கண்ணுக்கு தெரியாது. அந்த மாதிரிதான் தொழில்துறையும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறது. கனிம வளத்துறை பற்றி சபாநாயகருக்கே தெரியவில்லை.
சட்டப்பேரவையில் உள்ளவர்களுக்கும் கனிமவளத்துறை பற்றி தெரியவில்லை. துறையின் செயலாளருக்கும் தெரியவில்லை. ஒரே ஒரு ஆளுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது. அவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. அவர் தான் கொஞ்ச நாள் அந்தத் துறையை வைத்திருந்தார். அதனால் தான் அவர் மட்டும் பேசினார். அவர் பேசியது மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய துரைமுருகன், இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பொதுப்பணித்துறை, சட்டத்துறை என்று பல இலாகாக்களையும் வைத்திருந்தேன். ஆனால் இந்த மாதிரி ஒரு மூக்கணாங்கயிறே இல்லாத இலாகாவை நான் பார்த்ததே இல்லை. இதை எப்படித்தான் வைத்திருந்தார்களோ? என்னதான் செய்தார்களோ தெரியவில்லை. அது இலாகா மாதிரியே தெரியவில்லை. அதை கட்டிக் காப்பதே எனக்கு பெரிய வேலையாகி விட்டது என்று கூறினார். அமைச்சர் துரைமுருகனின் இந்தப் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், எப்படியோ மூக்கணாங்கயிறு போட்டு இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து விட்டேன். பள்ளத்தில் இருந்த இந்த துறையை இப்போது சமதளத்திற்கு உயர்த்திக் கொண்டு வந்து விட்டோம். இன்னும் சில ஆண்டுகளில் இந்த துறையை கோபுரமாக உயர்த்தி காட்டி விடுவோம்.

இந்த 2 ஆண்டுகளில் புவியியல் மற்றும் சுரங்கங்களில் இருந்து பெற்ற வருவாயை ரூ.1,572 கோடியாக அதிகரித்துள்ளோம். அதேபோல டாமின் நிறுவனத்தின் லாபமும் அதிகரித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த டான்மாக்ஸ் நிறுவனம் தற்போது லாபத்தில் இயங்கி வருகிறது எனத் தெரிவித்தார்.
அமைச்சர் துரைமுருகன் 1971ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதுவரை 12 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ள துரைமுருகன் 10 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ளார். திமுக ஆட்சிக் காலங்களில் சட்டத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்து வந்த துரைமுருகன் 2021 முதல் நீர்வளத்துறை, பாசனத்திட்டம், கனிமவளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications