ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.. அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்
மதுரை: ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டி உள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதமாக செயல்படுவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டினார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் இந்திய குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் பேசினார்.

அப்போது அவரிடம், வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக வருகிற நிதிகளை முறைப்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று மாணவர் ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், "தமிழ்நாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்திலும் இதுபோன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தமான நிகழ்வு.
வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நாட்டுக்கெதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எப்சிஐ நிதியை முறைப்படுத்தி உள்ளது . சட்டசபை தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் நாகரீகமாக நிராகரிப்பதாக பொருள்.
நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்று பொருள் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வே கூறுகிறது. பொதுப்பட்டியலில் உள்ளவைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றாவிடினும் மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மாநில அரசின் சட்டம் மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்த வேண்டும். பேரவையின் தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிக்கு உட்பட்டு இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும் " இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் இன்று கலைஞர் நூலகத்தில் இறுதி கட்ட வேலைகளை பொதுபணித்துறை அமைச்சர் எ.வ வேலு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்க பேட்டி அளித்த அவர், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதமாக செயல்படுகிறார். தற்கொலைகளை தடுக்க அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு விரைந்து அனுப்பியுள்ளது ஆனால் அவர் கிடப்பில் போட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை குற்றம் சொல்ல முடியாது. முதலமைச்சர் வேகமாக செயல்படுவதற்கு ஆளுநர் தடையாக உள்ளார் என எ.வ.வேலு குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications