இலவச வேஷ்டி, சேலைக்காக குவிந்த ர.ரக்கள் - கூட்டத்தைப் பார்த்து அலறியடித்து "எஸ்கேப்" ஆன அமைச்சர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அதிமுக தொண்டர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை, பணம் கொடுத்த விழாவில் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான எண்ணிக்கையில் தொண்டர்கள் குவிந்ததால் போலீஸ் காரில் ஏறி பறந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதி சட்டசபை உறுப்பினர் மற்றும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர். பண்டிகை காலங்களில் கட்சித் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை கொடுப்பது வழக்கம். இந்த வகையில் தீபாவளிக்கு வேட்டி துண்டு சட்டையுடன் ரூபாய் 200 பணமும் விராலிமலையில் உள்ள அலுவலகத்தில் கொடுப்பதாக "ரத்தத்தின் ரத்தங்களுக்கு" அழைப்பு சென்றது.

100 பேருக்குள் வருவார்கள் என்று எதிர்பார்த்ததால் அந்த அளவே வேட்டிகள், சேலைகள் இருந்தது. ஆனால் அமைச்சர் தீபாவளி பரிசு கொடுக்கும் தகவல் காட்டுத் தீயாக தொகுதிக்குள் பரவியதால் பல நூறு பேர் பைக், ஆட்டோ என்று வந்து குவிந்துவிட்டனர். இரவு 8 மணிக்கு வந்த அமைச்சர் இருப்பு உள்ளவரை கொடுத்தார். அதற்குள் கூட்டம் அதிகமாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தும் நிலை உருவானது.
சிறிது நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகத்தைவிட்டு வெளியே வர பரிசு கிடைக்காதவர்கள் "கய்யா முய்யா" என்று "வார்த்தை"களால் அர்ச்சனை செய்ய தொடங்கினார்கள். இதனால் மீண்டும் அலுவலகத்திற்குள் சென்றவர் போலீஸ் உதவியுடன் வெளியேற நினைத்து தனது காருக்கு வர கார் ஓட்டுநரை காணவில்லை.
தொண்டர்கள் சத்தம் அதிகமாக அவசர அவசரமாக போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் ஏறி அங்கிருந்து பறந்துவிட்டார் அமைச்சர். 5 நிமிடங்களுக்கு பிறகு அவரது கார் வெளியேறியது. நீண்ட நேரமாக முண்டியடித்து நின்று ஏமாந்த தொண்டர்கள் அமைச்சரை திட்டியபடியே சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications